எங்கள் தெற்கு திசை சரிந்துவிட்டது- வைரமுத்து
கலைத்தாயின் தலைமகனைக் காவு கொண்டுவிட்டது மரணம்.
தமிழ்த்தாயின் மகுடத்தை அலங்கரித்த மாணிக்கக் கல் பெயர்ந்து விட்டது.
தமிழர்களுக்கென்று இருந்த மனிதப் பெருமைகளில் ஒன்று இறந்து விட்டது.
நடிப்புலக மாமேதை சிவாஜி மறைந்துவிட்டார்.
கண்கள் நீர்கட்டி நிற்க நெஞ்சில் நுரைகட்டி இருக்கின்றன அவர் நினைவுகள்.
என்ன சொல்லிப் புலம்புவது? எதை எழுதி இரங்குவது?
தமிழர்களுக்குத் தமிழை உணர்ச்சியோடு உச்சரிக்கக் கற்றுக் கொடுத்த தமிழாசிரியரை இழந்தோமென்பதா?
மொழி ஊமையாகிப் போன இடத்தில் புருவங்களையும், கன்னங்களையும், நரம்புகளையும் பேசவிட்டுக் காட்டியபெருங்கலைஞனை இழந்தோம் என்பதா?
ஐம்பது ஆண்டுகளாக நிலவிய தமிழர்களின் சாயங்கால சந்தோசம் இறந்து விட்டதென்பதா?
பிடறி ஆடிய பெருஞ்சிங்கம் ஒன்று தன் கடைசி கர்ஜனையை நிறுத்திக் கொண்டதென்பதா?
எந்தப் பாத்திரத்தையும் ஜோடிக்கத் தெரிந்த மகாகலைஞனை மரணம் கொண்டது என்பதா?
கண்களை மூடிக் கொண்டு பார்த்தாலும் அவர் வண்ண வண்ணமாய் வந்து வந்து போவாரே !
தமிழர்கள் சிவனைப் பார்த்ததில்லை, சிவாஜியைப் பார்த்திருக்கிறார்கள்.
கட்டபொம்மனைப் பார்த்ததில்லை, கலைக்குரிசிலைப் பார்த்திருக்கிறார்கள்.
வ.உ.சியைப் பார்த்ததில்லை, வி.சி.கணேசனைப் பார்த்திருக்கிறார்கள்.
செத்துப் போன வரலாறுகளைக் கூட சிவாஜியின் தேக அசைவுகளில் தரிசித்தோம்.
இன்று அந்த தேகமே அசையாமல் கிடக்கிறது.
சிவாஜி மட்டும் ஒரு ஆங்கில நடிகராகப் பிறந்திருந்தால் இன்று அகிலமே அழுதிருக்கும்.
ஆனால் அவர் தமிழனாகப் பிறந்ததற்கும் சேர்த்து தமிழர்கள் அழுகிறார்கள்.
தனக்கென்று "இமேஜ்" என்ற எல்லை கட்டிக் கொள்ளாமல் குரூபியாய், குற்றவாளியாய், தொழுநோயாளியாய்,ஊனமுற்றவராய், உடல் சிதைந்தவராய், குடிகாரராய், கொள்ளைக் காரராய், நடைமுறை வாழ்க்கையின் அத்தனைபாத்திரங்களுக்கும் அர்த்தம் கொடுத்த ஒரு இமயம் இன்று தரையில் விழுந்து நொறுங்கி விட்டது.
சூரியனின் பாதிப்பில்லாமல் பூமியில் பொருட்கள் இல்லை.
சிவாஜியின் பாதிப்பில்லாமல் நடிப்புலகில் யாருமில்லை.
மரணத்தால் என்ன செய்ய முடியும்?
எலும்பு நரம்பு தசைகளைத்தான் எடுத்துண்ணமுடியும்.
அந்த மகா கலைஞனின் சிரிப்பை, அசைவை, நடிப்பை, நடையை மரணத்தின் மாயக் கரங்கள் மறைத்து விடமுடியுமா?
தமிழர்களுக்கு அவர் தந்து விட்டுப் போயிருக்கும் கம்பீரத்தையும், கர்வத்தையும், மரணத்தின் சுண்டு விரல் கூடத்தொட்டு விட முடியுமா?
நூரற்றாண்டுகள் கடந்தும் அவர் நீண்ட புகழ் நிலைத்திருக்கும்.
ஒவ்வொரு தமிழனும் சிவாஜிக்கு ஒரு நடமாடும் நினைவுச்சின்னம் தான்!
இவ்வாறு வைரமுத்து தனது இரங்கல் பாவில் கூறியுள்ளார்.