நடுக்கடலில் தவித்த 11 தமிழ் அகதிகள் மீட்பு
ராமேசுவரம்:
இலங்கையிலிருந்து வந்த 11 தமிழ் அகதிகள், வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது, இந்தியக்கடற்படை அவர்களை மீட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமையும் 11 தமிழ் அகதிகள் தலைமன்னாரிலிருந்து ஒரு படகின் மூலம் புறப்பட்டனர். படகுக்கட்டணமாக ரூ.10 ஆயிரத்தை இவர்கள் படகுக் காரர்களுக்குக் கொடுத்தனர்.
அரிச்சமுனை அருகே படகு வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இந்தியக் கடலோர ரோந்துப்படையினரைக் கண்டதும் படகுக் காரர்கள் பயந்து போனார்கள். அருகிலுள்ள ஒரு மணல் திட்டில் அகதிகளைஇறக்கி விட்டு, "இதுதான் தனுஷ்கோடி" என்று கூறிவிட்டு, படகை மீண்டும் திருப்பிக் கொண்டு போய்விட்டனர்.
அந்த இடம் தனுஷ்கோடி அல்ல என்பது, அதற்குப் பிறகுதான் அகதிகளுக்குத் தெரிந்தது. உணவு, தண்ணீர்இல்லாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அந்த வழியாக வந்த இந்தியக் கடற்படையினர், 11 அகதிகளையும் மீட்டு, ராமேசுவரம் கொண்டுவந்து சேர்த்தனர். ராமேசுவரம் போலீசில் ஒப்படைக்கப்பட்ட 11 பேரையும் கடுமையாகச் சோதித்துப் பார்த்தபோலீசார், பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த 11 அகதிகளில், 4 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்குவர்.