நாடாளுமன்றத்தில் திமுக- அதிமுக தமிழில் சண்டை
டெல்லி:
ராஜ்யசபாவில் அதிமுக எம்.பிக்களுக்கும் திமுக எம்.பிக்களும் தமிழில் ஒருவரை ஒருவர் அர்ச்சனை செய்துகொண்டனர்.
பூலன்தேவி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது,அதிமுக எம்.பியான பி.எச். பாண்டியன் எழுந்து பேசினார்.
அவர் கூறுகையில், எம்.பிக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது அவசியம் தான். ஆனால், போலீசாரை மத்தியஅமைச்சர்களும், எம்.பிக்களும் (மாறன், பாலுவை பெயர் சொல்லாமல் குறிப்பிட்டு...) தாக்கலாம் என்று உரிமைஏதும் தரப்பட்டிருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.
அப்போது அமைச்சர்கள் மாறன், பாலு இருவரும் அவையில் இல்லை.
பாண்டியனின் பேச்சையடுத்து திமுக எம்.பிக்களும், தமிழக பா.ஜ.க. எம்.பிக்களும் எழுந்து அவருக்கு தமிழில்பதில் கூறினர்.
பாண்டியனுக்கு ஆதரவாக அதிமுக எம்.பிக்கள் எழுந்து திமுக எம்.பிக்களை நோக்கி ஆவேசமாக பதில் கூறினர்.
சிறிது நேரம் இரு தரப்பினரும் எழுந்து நின்று தமிழில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். தமிழ் தெரியாதஎம்.பிக்கள் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர்.
வழக்கமாக இந்தி பேசும் எம்.பிக்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் நமது மாநில எம்.பிக்கள் முழிப்பதுதான் வழக்கம். இன்று வழக்கத்துக்கு மாறாக தமிழ் புரியாமல் அவர்கள் முழித்தனர்.
அதிமுக, திமுக எம்.பிக்கள் காரசாரமாக மோதிக் கொண்டபோது அவையின் துணைத் தலைவர் பி.எம். சயீத்தலையிட்டு இரு தரப்பினரையும் அமைதியாக இருக்குமாறு பல முறை கேட்டுக் கொண்டார். ஆனால், அவர்கள்அதை காதில் வாங்கவேயில்லை.
தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அவர்கள் பேசியது எதுவும் அவைக் குறிப்பில் இடம் பெறாதுஎன அறிவித்துவிட்டார்.
இரு தரப்பிலும் உருப்படியான விவாதம் நடத்தியிருந்தால், அது ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு பிற எம்.பிக்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். ஆனால், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டதால், இவர்கள் பேசியது அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டது.
இரு தரப்பினரும் மிகக் கடுமையாக தமிழில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து மத்திய ஐ.டி.துறை அமைச்சர்பிரமோத் மகாஜன் தலையிட்டு பி.எச். பாண்டியனையும், பிற திமுக உறுப்பினர்களையும் அமைதிப்படுத்தினார்.