மாஜி அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர். பன்னீர் செல்வம் ஆகியோர் மீது, ஊழல் தடுப்பு துறைநடவடிக்கை எடுக்க கோரும் மனு மீதான விசாரணையை, அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்து சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன் உத்தரவிட்டார்.
இந்த மனு வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன் முன்புவிசாரணைக்கு வந்தது.
அப்பாதுரை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஏ. சிராஜுதீன் கூறும்போது:
வீராணம் ஏரியின் ஆழத்தை அதிகப்படுத்துவதற்காக முந்தைய தி.மு.க.அரசு முடிவு செய்து, அந்த ஏரியையும்இங்கிருந்து நீர் செல்லும் மற்ற ஏரிகளையும் தூர்வாரும் பணிகளை ஆரம்பித்தது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்துள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன்,எம்.ஆர். பன்னீர் செல்வம் மற்றும் 2 கான்டிராக்டர்களுடன் சம்பந்தப்பட்டு உள்ளனர். இந்த முறைகேடு மூலம்அரசுக்கு ரூ.6.15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று அப்பாதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்த போது, முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார், இதுகுறித்து கடலூர் ஊழல் தடுப்புத் துறையிடம் புகார்கூறினார்.
ஆனாலும் கடலூர் மாவட்ட போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய தயங்குகின்றனர். இந்த வழக்கைத் துரிதப்படுத்தாவிட்டால் சாட்சிகள் அழிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து ஊழல் தடுப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார் வழக்கறிஞர் சிராஜுதீன்.
இந்த வழக்கில், அரசு சார்பில் இது குறித்து பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, இந்தவழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன் உத்தரவிட்டார்.