சுதந்திரத்தை அவமானப்படுத்திய விழா
பவானி:
பவானியில் நடைபெற்ற ஒரு சுதந்திர தின விளையாட்டு விழா, நம் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைஈந்த தியாகிகளையும், நாம் பெற்ற சுதந்திரத்தையும் அவமதிக்கும் விதமாக அமைந்திருந்தது.
இந்த விழா கொண்டாட்டத்தின் போது பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் வீரவிளையாட்டாக வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடைபெற்றது.
இந்த வழுக்கு மரத்தின் மேலே தேசிய கொடி நட்டு வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு கீழே 4 மதுபானபாட்டில்களும், 3 குளிர்பான பாட்டில்களும், பொரி உருண்டை, கடலை உருண்டை, பணமுடிப்பு ஆகியவை கட்டிவைக்கப்பட்டு இருந்தன.
வழுக்கு மரம் ஏறும் போட்டியில் பங்கு கொள்ள பவானியின் சுற்றுப் பகுதிகளிலிருந்தும் 9 குழுக்கள் வந்திருந்தன.உயரமான தேக்குமரத்தில் உளுந்து, கிரீஸ், விளக்கெண்ணெய், மாட்டுக் கொழுப்பு ஆகியவற்றை கலந்து தேய்த்துவைத்தனர். வழுக்கு மரம் பள பளவென்று மின்னிக் கொண்டிருந்தது.
விளையாட்டில் பங்கு பெற்ற யாராலும் வழுக்கு மரத்தில் ஏற முடியவில்லை. மரம் ஏற முயன்ற அனைவரும் வழுக்கிவழுக்கி விழுந்து கொண்டிருந்தனர். காலையில் ஆரம்பித்த விளையாட்டு மாலை வரை தொடர்ந்தது. யாராலும்தேசிய கொடிக்கு கீழே கட்டப்பட்டிருந்த மதுபான பாட்டிலை தொட முடியவில்லை.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சமூக நீதிக்கட்சியின் தலைவர் ஜெயப்பிரகாஷ் , துணைத்தலைவர் சூர்யா,செயலாளர் பழனி, பொருளாளர் தங்கபிரகாஷ். மற்றும் தில் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.
தேசிய கொடிக்கு கீழே மதுபானபாட்டில்களுடன் நடந்த இந்த சுதந்திர தின வீர விளையாட்டு, கஷ்டப்பட்டு,போராடி பெற்ற சுதந்திரத்தையே அவமதிக்கும் விதமாக அமைந்திருந்தது.
சுதந்திரத்தை அவமானப்படுத்தும் விதமாக நடந்த போட்டியை அந்த பகுதியில் இருந்த போலீசார் கண்டுகொள்ளாதது அதிசயம்தான். அது வேதனை அளிக்கக் கூடியதும் கூட.