அரைக் கம்பத்தில் தேசியக் கொடியா?: பா.ஜ.க. மறுப்பு
சென்னை:
சென்னை பா.ஜ.க. அலுவலகத்தில் சுதந்திரதின விழாவில் கொடியேற்றும் போது தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்படும் புகாரை தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் கிருபாநிதி மறுத்துள்ளார்.
சுதந்திர தின விழாவின் போது மாநில பா.ஜ.க. அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கொடிக்கம்பத்தில் கொடி கட்டப்பட்டு அதை ஏற்றும் முயற்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது பாதிக் கம்பத்தில் கொடி சரிபார்க்கப்பட்டபோது அதை ஒரு தனியார் தொலைக்காட்சி படம் எடுத்துச் சென்றது.
ஆனால் மற்ற தொலைக்காட்சி வீடியோகிராபர்கள், பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் அவசரப்படாமல் முழுவதுமான கொடிக்கம்பத்தின் உச்சியில் கொடி செல்லப்பட்ட பின்பு படம் எடுத்தனர்.
அவசரமாக எடுத்து அந்த தனியார் தொலைக்காட்சியினர் தவறான செய்தியையும் ஒளிபரப்பினர். இதையடுத்து ஒரு கட்சியின்தலைவரும் நடந்தது தெரியாமல் அவசர கோலத்தில் சூடான வார்த்தைகளைப் பயன்படுத்தி எங்களைக் கண்டித்துள்ளார்.
நடந்த உண்மை பிற தொலைக்காட்சி காட்சிகளைப் பார்த்தால் தெரியும், பத்திரிக்கை புகைப்படங்களைப் பார்த்தாலும் தெரியும்.அதை விடுத்து அவசர கோலத்தில் வார்த்தைகளை அள்ளிவிடுவது கண்டிக்கத்தக்க ஒன்று.
பிறகட்சிகளை விட தேசியக் கொடி மீது பா.ஜ.க. வுக்கு மிகுந்த மரியாதையும், தேச பக்தியும் உண்டு என்பதை இவர்களை விடமக்கள் நன்கு அறிவார்கள் என்று கூறியுள்ளார் கிருபாநிதி.












Click it and Unblock the Notifications