ராணுவத்திற்கு ஆளெடுக்கும் போது நெரிசல் - 6 பேர் படுகாயம்
சென்னை:
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ராணுவ நேர்முகத் தேர்வின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி, தேர்வுக்கு வந்த 6 இளைஞர்கள் மயங்கி விழுந்து, படுகாயமடைந்தனர்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வியாழக்கிமை மாலை முதலே பலரும் சென்னைக்கு வரத் தொடங்கினர்.வெள்ளிக்கிழமை காலை மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் நேர்முகத் தேர்வு நடக்கும் இடமான தீவுத்திடலுக்குவந்து சேர்ந்தனர்.
சுமார் 1,500 பேர் தீவுத்திடலில் உள்ள ராணுவ தேர்வு அலுவலகத்தின் முன் காத்திருந்தனர்.
தேர்வுக்காக கதவு திறந்து விடப்பட்டதும். அனைவரும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழையத்தொடங்கியதும் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முந்த முயற்சித்ததில் பலர் கீழே விழுந்தனர்.அவர்களை பலர் மிதித்துச் சென்றனர்.
இந்த கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைகலைத்தனர். இதில், நேர்முகத் தேர்வுக்காக வந்த 6 இளைஞர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர்.இவர்கள் மேல் பலரும் ஏறிச் சென்றதால் இவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த 6 பேரும் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.