மோட்டார் சைக்கிள், கார்களுக்கு வரி அதிகரிப்பு
சென்னை:
பொழுதுபோக்கு கிளப்கள், பிளாஸ்டிக் பொருட்கள், வாகனங்கள் மற்றும் எவர் சில்வர் சாமான்களுக்கு வரிவிகிதம்அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் பொன்னையன் அதிமுக அரசின் முதல் பட்ஜெட்டை சனிக்கிழமை சட்டசபையில் தாக்கல்செய்தார்.
அதில் வரி விகிதத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் விவரம் வருமாறு:
ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் ரூ.25 கோடி வரை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை வரியில் ஒருசதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்நோ பவ்லிங், பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் ஆகிய விளையாட்டு கிளப்களுக்கு இதுவரை வரிவிதிப்பு ஏதும்இல்லாமல் இருந்தது.
இந்த பட்ஜெட்டில் இந்த வினைளயாட்டு கிளப்களுக்கு 20 சதவீத கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.
(முன்னாள் முதல்வர கருணாநிதியின் பேரனும், சென்னை மேயர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி சென்னையில்இது போன்ற கிளப்பை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)
மேலும் மாநிலத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு , சில பொருட்களுக்கு நுழைவு வரிவிதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தெந்த பொருள்கள் என்பதற்கான அறிவிப்பு அவ்வப்போதுவெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2,3 மற்றும் 4 சக்கர வாகனங்கள், எலக்ட்ரிக் சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எவர் சில்வர் சாமான்கள்(வீட்டு உபயோகப் பொருட்கள் நீங்கலாக) போன்றவற்றிற்கு விற்பனை வரி 8 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாகஅதிகரிக்கப்பட்டுள்ளது.
புல்டோஸர்கள் போன்ற வாகனங்களுக்கு வரி அதிகரிக்கப்படவில்லை. கைவினைப் பொருட்களுக்கும் வரிஅதிகரிக்கப்படவில்லை.
மேலும் விற்பனை வரிச் சட்டத்தில் "டி" பிரிவில் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்திற்கும் விற்பனை வரி 4சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நெய் மற்றும் வெண்ணெய் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள 8சதவீத வரியில் மாற்றம் எதுவும் இல்லை.
அதேபோல் சூடத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் 4 சதவீத வரியில் எந்த மாற்றமும் இல்லை.
பட்டு மற்றும் பருத்தி போன்ற பொருட்களுக்கு வரி 11 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.