எம்.ஜி.ஆர். திரைப்பட நகர் மீண்டும் பெயர் மாற்றம்
சென்னை:
எம்.ஜி.ஆர். திரைப்பட நகர் புத்துயிரூட்டப்பட்டு அதன் பெயர் எம்.ஜி.ஆர். அறிவு நகர் என்று மாற்றியமைக்கப்படும் என்றுதமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உருவாக்கப்பட்ட இந்த திரைப்பட நகருக்கு ஜெ.ஜெ. பிலிம் சிட்டி எனபெயரிடப்பட்டது. பின்னர் கருணாநிதி முதல்வரானவுடன் இதன் பெயர் எம்.ஜி.ஆர். திரைப்பட நகர் என மாற்றியமைக்கப்பட்டது.
இப்போது இதன் பெயர் மீண்டும் மாற்றப்படுகிறது.
சனிக்கிழமை நிதியமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
மாற்றியமைக்கப்படும் எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் அதிநவீன வசதிகள் கொண்ட மாநாட்டு அரங்கம், அறிவுப் பூங்கா,மோட்டல்கள் ஆகியவை கட்டப்படும்.
மாநிலம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்என்ற பிரச்சாரம் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.
அரசின் கொள்முதல்களில் சிறு தொழில்துறையினர் கலந்து கொள்ள கடந்த ஆட்சிக்காலத்தில் தடை விதிக்கப்பட்டது. அந்தத்தடையை நீக்க அதிமுக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயிலில் 290 ஏக்கர் பரப்பளவில் சிறுதொழில் கழகத்தின் உதவியுடன் புதியசிறுதொழில்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
சென்னை அருகே பெண்களுக்கான சிறுதொழில் பூங்கா அமைக்கப்படும். மகளிர் தொழில் முனைவோருக்காக 4 தொழில்பூங்காக்கள் அமைக்கப்படும்.
சென்னையில் கடல் ஆய்வு மையமும் மற்றும் திண்டுக்கல்லில் மூலிகை ஆய்வு மையம் அமைக்கப்படும். ரூ. 1900 கோடி செலவில்தமிழகத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும்.
தமிழகம் முழுவதிலும் உள்ள 204 பழுதடைந்த பாலங்களை ரூ. 200 கோடி செலவில் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.