அதிமுக எம்.எல்.ஏவின் கன்னிப் பேச்சு: சட்டசபையில் திமுக-பாமக வெளிநடப்பு
சென்னை:
அதிமுக உறுப்பினர் ஒருவரின் பேச்சைத் தொடர்ந்து சட்டசபையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தையடுத்து திமுக,பா.ம.க மற்றும் எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
முதல்வராக இருந்தபோது கருணாநிதி செய்த குற்றங்களுக்காக, அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளவேண்டும். மேலும் கடந்த ஆட்சியில் கலர் டிவி ஊழலில் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். அப்போது அவர் பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இதேபோல மேலும் பல பொய் வழக்குகளை ஜெயலலிதா மீது திமுக அரசு போட்டு அவரைக்கொடுமைப்படுத்தியது என்றார் சேகர் பாபு.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன், சபாநாயகரைப் பார்த்து அதிமுகஉறுப்பினர் இவ்வாறு ஆதாரமில்லாத தகவல்களை தெரிவிப்பதாகக் கூறினார்கள்.
ஆனால் சேகர் பாபு தனது பேச்சை நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் திமுக அமைச்சர் ஒருவரின் தம்பியைக் கைது செய்தபோது அவர் தனக்கு நெஞ்சு வலி என்றுநாடகமாடினார்.
அவர் போலியாக நடிக்கிறார் என்று தெரிந்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதான் ஜெயலலிதாஅவர்களின் பெருந்தன்மை என்று பேசினார் சேகர் பாபு.
இதையடுத்து, மீண்டும் திமுக உறுப்பினர்கள் எழுந்து சபாநாயகரிடம் முறையிட்டனர். இதனால் சபையில் கூச்சலும்குழப்பமும் ஏற்பட்டது.
இதற்கு சபாநாயகர் காளிமுத்து, "உறுப்பினர் சேகர் பாபுவுக்கு இதுதான் கன்னிப் பேச்சு. ஒரு உறுப்பினர் முதன்முதலாக சபையில் பேசிக் கொண்டிருக்கும் போது அதைத் தடுப்பது மரபல்ல" என்று கூறினார்.
இதையடுத்து சபாநாயகரிடம் எங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று கூறிவிட்டு திமுக உறுப்பினர்கள் சபையைவிட்டு வெளியேறினார்கள்.
பா.ம.கவும் வெளிநடப்பு
திமுக உறுப்பினர்கள் வெளியேறிய பிறகு பா.ம.க. உறுப்பினர் ஜி.கே. மணி பேசத் தொடங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது அதிமுக தொண்டர்கள் யாரும்அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
அப்போது அவர் தனியாக "அனாதையாக உணர்கிறேன்" என்றார். இது பற்றி அவர் எங்கள் தலைவர் ராமதாசிடம்கூட அப்போது கூறினார் என்றார் மணி.
உடனே கல்வி அமைச்சர் தம்பிதுரை எழுந்து, "உறுப்பினர் மணி சொல்வது போன்று அதிமுக தொண்டர்கள் யாரும்ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை எதிர்க்காமல் இல்லை. மேலும் அதிமுக தொண்டர்களால் ஜெயலலிதா"அனாதையாக" விடப்பட்ட சூழ்நிலை எப்போதும் இருந்ததில்லை" என்றார்.
அப்போது அனைத்து அதிமுக உறுப்பினர்களும் எழுந்து மணியின் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள்.இதையடுத்து சபாநாயகர் காளிமுத்து, உறுப்பினர் மணியின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து அகற்றுவதாகஅறிவித்தார்.
பிறகு, தனக்கு சபையில் பேச்சுரிமை மறுக்கப்படுவதாகக் கூறி சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தார் மணி.அவரைத் தொடர்ந்து, மற்ற பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்களும் வெளியேறினார்கள்.
அவர்களைத் தொடர்ந்து, எதற்காக வெளியே போகிறோம் என்பதற்கான காரணமே இல்லாமல், எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. உறுப்பினர்களும் சபையைவிட்டு வெளியேறினார்கள்.