திமுகவினர் மாடுகளா? - சட்டசபையில் துரைமுருகன் வாக்குவாதம்
சென்னை:
திமுகவினரை மாடுகள் என ஏன் வர்ணித்தீர்கள் என்று சபாநாயகர் காளிமுத்துவுடன் முன்னாள் அமைச்சர்துரைமுருகன் வாக்குவாதம் செய்தார்.
விவாதத்தின் போது எம்.ஜி.ஆர். அதிமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசும் போது பரிதி இளம்வழதி மற்றும் ரங்கநாதன்எம்.எல்.ஏக்கள் கைது பற்றிப் பேசினார். அதற்கு சட்ட அமைச்சர் பொன்னையன் எழுந்து நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ள வழக்கைப் பற்றிச் சட்டமன்றத்தில் பேசுவது தவறு என்றார்.
அதற்கு திமுக உறுப்பினர் துரைமுருகன் எழுந்து, "கைது செய்யப்பட்டனர் என்றுதானே ஆஸ்டின் சொன்னார். அதில்என்ன தவறு இருக்கிறது?" என்று கேட்டார்.
அப்போது சபாநாயகர் துரைமுருகனிடம், "அதிமுக உறுப்பினர் சேகர்பாபு, முன்னாள் அமைச்சரின் தம்பி கைதுசெய்யப்பட்டது குறித்துப் பேசியதற்கு, கோபமாக "தொட்டாச்சிணுங்கி போல" வெளிநடப்பு செய்தீர்களே" என்றார்.
இதற்கு துரைமுருகன் எழுந்து சபாநாயகரிடம், "நீங்கள் எங்களை சமீப காலமாக "உவமானப்படுத்துவது" எங்கள்மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு எங்களை "மாடு" என்று வர்ணித்தீர்கள்.இப்போது "தொட்டால் சிணுங்கி" என்கிறீர்களே?" என்று கேட்டார்.
அதற்கு சபாநாயகர், "உவமைக்காக அப்பபடிச் சொன்னேன். "மாடு போகும் வழியில் தான் கயிறும் போகும்" என்றுநான் சொன்னதற்குத் தவறான, நேரடி அர்த்தம் கொள்ளக் கூடாது. திருவள்ளுவர் கூட கடுமையாகஉழைப்பவர்களை "மாடு" என்று திருக்குறளில் கூறியுள்ளார்" என்றார்.
பிறகு முதல்வர் ஜெயலலிதா எழுந்து, "தொட்டாச்சிணுங்கி" என்றால் நல்ல வார்த்தைதானே, "சென்சிடிவ்"என்றுதானே அதற்கு அர்த்தம் என்றார்.
அதற்கு சபாநாயகர், "துரைமுருகன் எப்போதும் "சென்சிடிவ்" ஆகத் தான் இருப்பார். ஒருமுறை எம்.ஜி.ஆரைப்பற்றிப் பேசும்போது சபையில் மயங்கியே விழுந்துவிட்டார். பிறகு எம்.ஜிஆர்., தனது காரிலேயே துரைமுருகனைமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்" என்று காளிமுத்து கூறினார்.
துரைமுருகன் அதற்கு "ஆமாம்" என்பதைத் போலத் தலையாட்டினார்.