திமுக கூட்டணியில் சேர மதிமுக, பாமகவுக்கு பாஜக அழைப்பு
சென்னை:
"சட்டசபைத் தேர்தலின்போது பிரிந்து சென்ற மதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளை, வரும் உள்ளாட்சித்தேர்தலின்போது திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேர்க்க முயற்சிகள் எடுப்போம்"என்று பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல. கணேசன் கூறியுள்ளார்.
தேசிய அளவில் வாஜ்பாய் தலைமையை ஏற்றுள்ள பாமக மற்றும் மதிமுக ஆகியவற்றை தமிழகத்தில் திமுகதலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைக்க பாஜக ஆர்வத்துடன் உள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரை தமிழக பாஜகவைச்சேர்ந்த மூன்று பேர் அடங்கிய குழு நேரில் சந்தித்து, இணைப்பு குறித்துப் பேசுவார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி கட்சிகளுடன் இடப் பங்கீடு குறித்துப் பேச பொன். ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் எச். ராஜா ஆகியோர் அடங்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மாநில பாஜக தேர்தல் குழு 18, 19 ஆகிய தேதிகளில் சென்னையில் கூடி வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.