போரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சிகள் போராட்டம்
டெல்லி:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதலை எதிர்த்து இந்தியாவில் உள்ள இடதுசாரிக்கட்சிகளான கம்யூனிஸ்டு கட்சிகள் வரும் 12ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
"இந்தப் போரின் விளைவால் நம் நாட்டுக்குத்தான் கெடுதல் ஏற்படும். நாட்டின் ஒற்றுமையும் குலைந்து விடும்.எனவே இந்தப் போருக்கு மத்திய அரசு ஆதரவளிக்கக் கூடாது" என்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வேண்டுகோள்விடுத்துள்ளன.
செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குக் காரணமானவர்களை ஐ.நா. முன் நிறுத்தி,சர்வதேசச் சட்ட திட்டங்களின் படி தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்துள்ளன.
"அவ்வாறு செய்வதை விட்டுவிட்டு, தற்போது ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும்போர் தொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்தப் போரை உடனடியாக நிறுத்தக் கோரி, அக்டோபர் 12ம் தேதி நாடுமுழுவதும் கண்டனப் போராட்டங்களை நடத்துவோம்" என்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.