கள்ளச் சாராய தடுப்பு நடவடிக்கை: "மெத்தனாலுடன் கசப்பு சுவையை சேர்க்க வேண்டும்"
சென்னை:
சென்னை கோட்டூரில் 36 பேர் உயிரை பலிகொண்ட மெத்தனால் ரசாயன பொருளுடன் கசப்பு சுவையை சேர்க்கவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
கடந்த வாரம் சென்னை அருகேயுள்ள கோட்டூரில் மெத்தனால் என்ற விஷதிரவம் கலந்த விஷச்சாராயத்தைகுடித்ததால் 36 பேர் இறந்து போனார்கள். இன்னமும் பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மெத்தனால் என்ற இந்த விஷ திரவம் தமிழகத்தில் உள்ள 160 தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆனாலும் மெத்தனால் தமிழகத்தில் தயாரிக்கப்படுவதில்லை. மகாராஷ்டிரா, குஜராத், அசாம் ஆகிய மாநிலங்களில்தயாரிக்கப்பட்டு அங்கிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த வாரம் நடந்த விஷச்சாராய சாவுகளையடுத்து, மேலும் இது போன்ற விஷச்சாராய சாவுகள் நடைபெறாமல்தடுக்க எந்த விதமான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனைநடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது மெத்தனாலை மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கொண்டு வருவது உள்ளிட்ட பல முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டன.
மெத்தனாலோடு நீலம் அல்லது வயலெட் நிறம் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். மேலும் மெத்தனாலோடுகசப்பு சுவை சேர்க்கப்பட வேண்டும்.
இது குறித்து மத்திய அரசை வலியுறுத்தவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. சாந்தா ஷீலா நாயர் உள்துறைசெயலாளராக இருந்த போது இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் மத்திய அரசு எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த கருத்தை மீண்டும் தமிழக அரசு வலியுறுத்தும். மெத்தனாலை பயன்படுத்தும் விதிகளில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
தற்போது மெத்தனாலுக்கு வழங்கப்பட்டுள்ள லைசென்சுகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தக்கவிதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களது லைசென்சும்ரத்து செய்யப்படும்.
தொழிற்சாலைகள் தாங்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருட்களுக்கு மெத்தனாலைத் தவிர வேறு ரசாயனபொருட்களை பயன்படுத்த முடிவெடுத்தால் அவர்களுக்கு தக்க கால அவகாசம் அளிக்கப்படும். மெத்தனாலைபயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும்..
மெத்தனாலை பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் தவறு ஏதேனும் நடைபெற்றால் அதற்கு காரணமானவர் யார்என்பதை தொழிற்சாலை அரசிடம் தெரிவிக்க வேண்டும்.
அண்டை மாநிலங்களிலிருந்து மெத்தனாலை ஏற்றி வரும் லாரிகள் தமிழக எல்லையில் நுழைந்த பின் அவற்றிற்குதக்க போலீஸ் காவல் வழங்கப்படும்.
மெத்தனால் ஏற்றி வரும் லாரிகளில் "மண்டை ஓடு" படம் வரையப்பட்டு "விஷம்" என்று எழுதப்பட்டிருக்கவேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.