ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் மதானி
டெல்லி:
தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார் அப்துல் நாசர் மதானி.
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டு கைதாகி இருப்பவர் கேரளமக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி.
கோவை தனி நீதிமன்றத்தில் கடந்த வாரம்தான் இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்த 167 பேர் மீதும்குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதானி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் வந்தது.
ஆனால், அந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக மதானியின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இதைஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மதானியின் ஜாமீன் கோரும் மனுவை வழக்கறிஞரிடமே திருப்பி அளித்து விட்டனர்.
மேலும் மதானி ஜாமீன் கோர விரும்பினால், மீண்டும் இதே உச்ச நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்யலாம்என்றும் நீதிபதிகள் கூறினர்.