ஏ.கே.47 தவறுதலாக வெடித்ததில் அதிரடிப்படை வீரர் குண்டு பாய்ந்து சாவு
மேட்டூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை வீரர் ஏ.கே.47 ரக துப்பாக்கியைச்சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தவறாக வெடித்ததில் மற்றொரு வீரர் குண்டு பாய்ந்து இறந்தார்.
சேலம் மாவட்டம் சின்னதண்டாவில் 60 அதிரடிப்படை வீரர்களைக் கொண்ட ஒரு முகாம் உள்ளது. இப்பகுதியில்உள்ள காட்டுப் பகுதியில் அவர்கள் வீரப்பனைத் தேடி தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர்.
நேற்று (திங்கள்கிழமை) மாலை அவர்கள் தேடுதல் வேட்டையை முடித்துவிட்டுத் திரும்பினார்கள்.
தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கிகள், குண்டுகள், ரைபிள்கள் மற்றும் வீரப்பன் வேட்டைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பொருட்களை அதிகாரியிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அன்பழகன் என்ற வீரர் ஏ.கே.47 ரக துப்பாக்கியிலிருந்து குண்டுகளை வெளியே எடுத்துக் கொண்டிருந்தபோது,அவருடைய கை துப்பாக்கியை இயக்கும் விசையின் மீது பட்டதால், துப்பாக்கி வெடித்து குண்டுகள் சீறிப்பாய்ந்தன.
இதனால், அன்பழகனுக்கு எதிராக நின்று கொண்டிருந்த வேல்முருகன் (25) என்ற மற்றொரு வீரரின் தலையில்குண்டு பாய்ந்தது.
ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த வேல்முருகன் மேட்டூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேட்டூர் துணை கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த தி. கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், 1997ம் ஆண்டுதமிழக காவல் துறையில் சேர்ந்தார். பின்னர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் அதிரடிப்படைக்குஅழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.