கட்டண, விலை உயர்வுகள்: 7ம் தேதி எதிர்க்கட்சிகள் "பந்த்"
சென்னை:
கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளை எதிர்த்து தமிழகத்தில் வரும் 7ம் தேதி பந்த் நடத்த 8 தமிழக எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
தமாகா, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமாகா ஜனநாயக பேரவை, விடுதலைசிறுத்தைகள், மக்கள் தமிழ் தேசம், முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் ஆகிய கட்சிகள் நேற்று (சனிக்கிழமை)இதற்காக ஆலோசனைக் கூட்டம் நடத்தின.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் என். சங்கரய்யா தலைமையில் நடந்த இக்கூட்டத்தின் முடிவில்வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் சேவைக் கட்டணங்களையும் அரசு கடுமையாகஉயர்த்தியுள்ளது. அனைத்து மக்களையும் இந்த உயர்வுகள் மிக மோசமாகப் பாதித்துள்ளது.
நிதிப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு மாற்று நடவடிக்கையை எடுப்பதற்குப் பதில் மக்கள் மீது பாரத்தைச்சுமத்துவது சரியான அணுகுமுறை அல்ல. இவற்றை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
இத்தகைய நெருக்கடியின்போது மத்திய அரசு வேறு சில மாநிலங்களுக்கு நிதி உதவி செய்தது போல்தமிழகத்திற்குச் செய்ய முன் வரவில்லை. இதனால் தமிழகத்திற்கு போதிய நிதி உதவி அளிக்க வேண்டும் என்றுமத்திய அரசை இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.
மேலும் இந்தக் கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளை எதிர்த்து வருகிற 7ம் தேதி (வெள்ளிக்கிழமை)தமிழகத்தில் முழு அடைப்பு நடத்துவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிண வரை அமைதியான முறையில் இந்த முழு அடைப்பை நடத்திடஅனைத்து மக்களும் ஆதரவு அளித்திட வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
பத்திரிக்கைத் துறை, பால் விநியோகத் துறை, மருத்துவத் துறை, குடிநீர் விநியோகத் துறை, தீயணைப்பு, மின்சாரம்போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு இந்த முழு அடைப்பிலிருந்து விதி விலக்கு அளிக்கப்படுவதாகவும் அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த முழு அடைப்பிற்கு திமுகவை அழைக்காத போதிலும், அவர்கள் ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வோம்என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லக்கண்ணு கூறினார்.