மீண்டும் ஜெ. முதல்வராக தடை இல்லை: சட்ட நிபுணர்கள் கருத்து
புதுடில்லி:
டான்சி மற்றும் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா மீண்டும்முதல்வராக தடை ஏதும் இல்லை என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(3)ன்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில்போட்டியிடும் தகுதியை இழக்கின்றனர்.
இந்த சட்டத்தின்படி நடந்து முடிந்த தேர்தலில் ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் அதிமுகவெற்றியடைந்ததால், அவர் முதல்வராக பதவி ஏற்றார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவர் முதல்வராகப் பதவி ஏற்றது செல்லாதுஎன்று கூறி பதவி இறக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மீதான இரண்டு வழக்குகளிலும் நேற்று விடுதலை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.இதனால் அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பது குறித்து சட்டநிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
பிரபல அரசியலமைப்பு சட்டநிபுணரும், ராஜ்யசபா உறுப்பினருமான பாலி எஸ்.நரிமன் கூறுகையில்,ஜெயலலிதாவுக்கு எந்த தண்டனையும் இல்லாத பட்சத்தில் அவர் மீண்டும் முதல்வராக தடை ஏதுமில்லை என்றார்.
எம்.எல்.ஏவாகவோ, எம்.பியாகவோ இல்லாத ஒருவர் 6 மாத காலத்திற்கு மீண்டும் முதல்வராக முடியாது என்றுஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது குறித்து கேட்டபோது,ஜெயலலிதா முதல்வராகும் விஷயத்தில் இந்த உத்தரவு அவருக்கு தடையாக இருக்காது என்று நரிமன் கருத்துதெரிவித்தார்.
மூத்த வக்கீலும்,ராஜ்யசபா எம்.பி.யுமான கபில் சிபல், குற்ற சதி என்ற குற்றச்சாட்டின் மூலம் அரசியல்வாதிகளைநீதிமன்றத்துக்கு இழுப்பது தற்போது சகஜமாகி விட்டது என்று கூறினார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான வழக்கறிஞர்கள், ஜெயலலிதாவின் மீது எந்த தண்டனையும் இல்லாததால்அவர் இப்பொழுதே முதல்வராக பதவியேற்றால் அது சட்டப்படி செல்லும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.