தலிபான் ஆட்சி முடிந்தது: கார்சாய் மகிழ்ச்சி
காபூல்:
காண்டஹார் நகரை ஒப்படைக்க முன் வந்ததன் மூலம் தலிபான்களின் ஆட்சி முழுவதுமாக முடிவுக்கு வந்தது என்றுஆப்கானிஸ்தான் பிரதமராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள ஹமீத் கார்சாய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
எப்படியும் காண்டஹாரைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்துபார்த்தனர். அமெரிக்க விமானங்களுக்கும் காண்டஹாரைக் கைப்பற்றுவது பெரும் சிரமமாகவே இருந்து வந்தது.நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரும் தட்டுத் தடுமாறித்தான் போனார்கள்.
இந்நிலையில் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல், காண்டஹார் நகரை ஒப்படைத்து விடுகிறோம் என்றுதலிபான்கள் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தனர்.
இதையடுத்து, இன்று காலையிலிருந்தே தலிபான் படையினர் தங்களிடமிருந்த ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் ஒப்படைக்க ஆரம்பித்தனர். தற்போது அவர்கள் தங்களிடமிருந்த அனைத்து ஆயுதங்களையும்ஒப்படைத்து விட்டனர்.
காண்டஹாரில் உள்ள முக்கிய அலுவலகங்கள், விமான நிலையம், ராணுவ நிலைகள் ஆகியவற்றை தலிபான்கள்காலி செய்துவிட்டனர். இதையடுத்து ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி முழுமையாக முடிவுக்குவந்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கார்சாய்.
இன்று மாலை அல்லது நாளைக்குள் தலிபான் தலைவரான முல்லா முகமது ஒமர் சரணடையக் கூடும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தவறு செய்ததுநிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனையும் உண்டு என்றும் கார்சாய் கூறியுள்ளார்.
அமெரிக்க மெரைன் படையினர் தாக்கி 7 அல்-கொய்தாவினர் பலி:
இதற்கிடையே அமெரிக்க மெரைன் படையினர் தங்களுடைய முதலாவது தரைப்படைத் தாக்குதலைத்தொடுத்துள்ளனர்.
இத்தாக்குதலில் 7 அல்-கொய்தா படையினர் கொல்லப்பட்டனர்.
தலிபான் ஆதரவு படையினர் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓட்டம்:
இந்நிலையில் தலிபான்களுக்கு ஆதரவாக அமெரிக்காவை எதிர்த்துச் சண்டையிட்ட பல வெளிநாட்டு வீரர்களும்அல்-காய்தா படையினரும் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
பாகிஸ்தான் தன்னுடைய எல்லைப் பகுதியை இழுத்து மூடிய போதிலும், நீளமான எல்லைப் பகுதிகள் வழியாகபாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளனர். பாகிஸ்தானின் பல இடங்களில் அவர்கள் தென் பட்டதாகக் கூறப்படுகிறது.