சட்டக் கல்லூரி மாணவர்கள்-பொது மக்கள் பயங்கர மோதல்: 50 பேர் காயம்
சென்னை:
சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்கள் மற்றும் போலீஸாருக்கும் இடையே நடந்த கடும் மோதலில் பலமாணவர்கள் மிகக் கடுமையாக தாக்கப்பட்டனர். பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. மொத்தம் 50 பேர் காயமடைந்தனர்.
சென்னை பிராட்வே பகுதியில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் மாணவர்கள் விடுதி புரசைவாக்கத்தில் உள்ளது.விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவர்கள் விடுதிக்கு அருகேயுள்ள ஹோட்டலுக்கு வெள்ளிக்கிழமை இரவு சாப்பிடச் சென்றுள்ளனர்.
சாப்பிட்டு முடித்த பின் பில் கொடுப்பதில் ஹோட்டல் ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் சிலர் மாணவர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது.
சோடா பாட்டில் வீச்சு:
இதையடுத்து சில மாணவர்கள் ஹாஸ்டலுக்கு விரைந்து சென்று மாணவர்களை ஹோட்டல் ஊழியர்கள் தாக்குவதைக் கூறினர். உடனேஹாஸ்டலில் இருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஹோட்டலுக்கு விரைந்தனர்.
ஹோட்டலுக்கு வந்த மாணவர்கள் ஹோட்டல் ஊழியர்களைத் தாக்கியுள்ளனர். ஹோட்டல் காரர்களுக்கு ஆதரவாக அப்பகுதி பொதுமக்கள்மாணவர்களை தாக்கத் தொடங்கினர். இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியது. இரு தரப்பினரும் சோடா பாட்டில்களையும்கற்களையும் வீசித் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து வேப்பேரி போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.
இந்த மோதலைப் பயன்படுத்திக் கொண்டு சில சமூக விரோதிகள் ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள் சகிதம் அங்கு விரைந்துமாணவர்களைக் கண்மூடித்தனமாக தாக்கினர். நள்ளிரவை நெருங்கிய நேரத்தில் இந்த வன்முறையைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்திப்பார்த்தனர்.
ஹாஸ்டலில் நுழைந்து போலீசார் தாக்குதல்:
ஆனால் போலீஸார் மீது சிலர் கல்வீச்சில் இறங்கினர். இதையடுத்து போலீஸார் மாணவர்களைத் துரத்தி துரத்தி தடியடி நடத்தினர்.ஹாஸ்டலுக்குள் புகுந்தும் மாணவர்களை போலீஸார் அடித்ததாகக் கூறப்படுகிறது.
மாணவர்கள் தாக்குதலில் திருமங்கலம் உதவி போலீஸ் கமிஷனர் பாஸ்கர் படுகாயமடைந்தார். மேலும் பல போலீஸாரும் காயமடைந்தனர்.இந்த போலீசார் அனைவரும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 20போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மண்டை உடைந்த மாணவர்கள்:
மாணவர்கள் 15 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு மண்டை உடைந்துள்ளது.பலரின் கால்கள், கைகள் முறிந்துள்ளன. சென்னை அரசு பொதுமருத்துவனையிலும் சிலர் அனுமதிக்கப்பட்டனர்.
மோதல் தொடர்பாக 46 மாணவர்கள் மற்றும் 2 பொதுமக்களை வேப்பேரி போலீஸார் கைது செய்துள்ளனர். அந்தப் பகுதியில் ஆயுதம்தாங்கிய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸார் சாதாரண உடையில் வந்து தங்களை கண்மூடித்தனமாக தாக்கியதாக மாணவர்கள் கூறியுள்ளனர். பொதுமக்களுடன் ரவுடிகளும்சேர்ந்து தங்களைத் தாக்கியதாக ஹாஸ்டலில் தங்கியிருந்த பல மாணவர்கள் கூறினர்.
இந்த மோதலில் சம்பந்தப்படாத மாணவர்கள் பலரையும் போலீஸார் தாக்கியுள்ளனர்.
மோதல் ஏன்?- முத்துக்கருப்பன விளக்கம்:
இந்த பயங்கர மோதல் குறித்து போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறுகையில், ஹோட்டலில் சாப்பிட்ட மாணவர்கள் கட்ட வேண்டிய பில்பணத்தில் கொஞ்சம் குறைந்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கும் சர்வர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது அருகில் இருந்த மோட்சம் தியேட்டரில் இரவுக் காட்சி பார்த்து விட்டுத் திரும்பிய சிலர் மாணவர்களுக்கு எதிராக தாக்குதலில்இறங்கியுள்ளனர். இதையடுத்து பொதுமக்களில் சிலர் சட்டக் கல்லூரி விடுதிக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதலைத் தடுக்க முடியாத நிலையில் போலீஸார் தடியடியில் இறங்கியுள்ளனர். கைதான மாணவர்களில் 6 பேர் தேர்வு எழுதவேண்டும் என்று கூறியதால் அவர்களை போலீஸார் விடுவித்து விட்டனர். அந்தப் பகுதியில் தற்போது அமைதி நிலவுகிறது என்றார்.
இந் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களையும் போலீசாரையும் காவல்துறைகமிஷ்னர் முத்துக்கருப்பன் நேரில் சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார்.