தமிழகத்தின் புகழ் பெற்ற தாய்மார்கள் யார்?: காளிமுத்து விளக்கம்
சென்னை:
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தாய்மார்கள் யார் என்பது குறித்து சட்டசபை சபாநாயகர் காளிமுத்து விளக்கம் தந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் வளாகத்தில் அதிமுக சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பெயர்சூட்டப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தை காளிமுத்து திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பொன்னையன், அமைச்சர் ராமசாமி, தினகரன்எம்.பி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காளிமுத்து நிகழ்ச்சியில் பேசுகையில்,
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற, சிறப்பு மிக்க இரண்டு தாய்மார்கள் குறித்து விளக்கினார்.
அவரது பேச்சின் சில துளிகள்...
தாய் என்பவர் தெய்வத்தின் மறு வடிவம். தாயின் காலடியில்தான் சொர்க்கமே உள்ளது என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்.தாய்தான் தனது பிள்ளைகளின் வளர்ச்சிக்கு முழுக் காரணம் ஆவார்.
தமிழகத்தைப் பொருத்தவரை இரண்டு தாய்மார்கள்தான் புகழ் பெற்றவர்கள் ஆவர். ஒருவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப்பெற்றெடுத்து சத்தியா. இன்னொருவர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவைப் பெற்றெடுத்த சந்தியா.
நக்கீரர் கூறிய ஆறுபடை வீடுகளில் முக்கிய வீடான பழனியில் உள்ள முருகன் கோவிலில் அன்னை சந்தியா பெயரில்மணிமண்டபம் கட்டியுள்ளது பாராட்டுக்குரியது. வானத்தில் நிலவாக திகழும் ஜெயலலிதாவின் புகழைக் குறைக்க சில கருமேகங்கள் முயலுகின்றன.
ஆனால் அது நடக்காத காரியம். அவர் எப்போதும் முழு நிலவாகவே ஜொலித்துக் கொண்டிருப்பார்.
அடுத்த சட்டசபைக் கூட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக கலந்து கொள்வார். இது நிச்சயம் நடக்கத்தான் போகிறது என்றார் அவர்.