சலுகைகள் பறிப்பு: அரசு ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதம்
சென்னை:
தங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக அரசு ஊழியர்கள் இன்று(புதன்கிழமை) ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
கடந்த மாத இறுதியில் தமிழக அரசு திடீரென்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் பஸ்கட்டணத்தையும் உயர்த்தியது.
நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இவ்வாறு செயல்பட்ட தமிழக அரசு, அரசு ஊழியர்களின் மடியிலும் கைவைத்தது. தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, ஈட்டு விடுப்பைப் பணமாகமாற்றுவது, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பொது வைப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பது போன்ற சலுகைகள் ரத்துசெய்யப்பட்டதையடுத்து, அரசு ஊழியர்கள் மிகவும் கொதிப்படைந்தனர்.
இதைவிட அரசு வாகனங்களை ஓட்டுவது, அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு ஆட்களை நிறுத்துவதுபோன்றவற்றில் தனியார்களை ஈடுபடுத்துவது என்ற அரசின் முடிவைக் கேட்டு கொந்தளிப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள் அரசு ஊழியர்கள்.
இதையடுத்து, பல்வேறு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அரசு ஊழியர்கள் சார்பில் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து, அரசுஊழியர்கள் ஒன்றியம் சார்பில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் சென்னையில் நடந்தது.
இந்த ஒன்றியத்தின் தலைவர் கோ. சூரியமூர்த்தி உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார்.
உண்ணாவிரதத்தில் அரசு ஊழியர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பல்வேறு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications