எம்.எல்.ஏ. கடத்தல்: குழப்பம்... குழப்பம்.
சென்னை:
பா.ம.க. எம்.எல்.ஏ. சிவகாமியுடன் சேர்த்து அவரது கணவர் மற்றும் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளதாக ராமதாஸ்கூறியுள்ள நிலையில், தனது மனைவிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக வின்சென்ட் தனியே போலீசில் புகார்தந்துள்ளார். இதனால், இந்த விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தாராபுரம் எம்.எல்.ஏவான சிவகாமியை கடந்த 4 நாட்களாகக் காணவில்லை. அவர் திருவண்ணாமலையில் ஒருகட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், திருவண்ணாமலையில் கட்சிநிகழ்ச்சி ஏதும் இல்லை. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் பா.ம.கவினர் குழம்பி வந்தனர்.
இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன் சிவகாமிக்கும், குடும்பத்துக்கும் பா.ம.கவினரிடமிருந்து கொலைமிரட்டல்கள் வருவதாக தாராபுரம் காவல் நிலையத்தில் சிவகாமியின் கணவர் வின்சென்ட்டே புகார்கொடுத்துள்ளார். தனது மனைவி கட்சிப் பணிக்காக வெளியூர் சென்றிருப்பதாகவும் அவர் எங்கிருக்கிறார் என்றுதெரியவில்லை என்றும் தனது புகாரில் வின்சென்ட் கூறியுள்ளார்.
நிலையை இவ்வாறு இருக்க சிவகாமி தனது குடும்பத்துடன் கடத்தப்பட்டுள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளதுகுழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசில் புகார் கொடுத்த பின்னர் வின்சென்ட்டும், குடும்பத்தினரும்கடத்தப்பட்டனரா என்பது குறித்து ஏதும் தெரியவில்லை.
இந் நிலையில் அவர் அதிமுகவுக்கு கட்சி மாற முடிவு செய்துவிட்டதாகவும், இதைத் தடுக்க ராமதாஸ் முயலலாம்என்பதால் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு செங்கோட்டையன் உதவி வருவதாகத்தெரிகிறது. இதைத் தான் செங்கோட்டையனே கடத்தி விட்டதாக ராமதாஸ் திரித்துக் கூறி வருவதாகவும்கூறப்படுகிறது.
செங்கோட்டையனுக்கு போலீஸ் பாதுகாப்பு:
பா.ம.க. எம்.எல்.ஏவை செங்கோட்டையன் கடத்திவிட்டதாகக் கூறி அக்கட்சியின் சட்டமன்றத் தலைவர் ஜி.கே.மணிதலைமையில் பா.ம.கவினர் செங்கோட்டையன் வீட்டின் முன்பு கூடி அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.இதையடுத்து செங்கோட்டையன் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.