எதிர்க் கட்சிகளை அழிக்க ஜெ. சதி: ராமதாஸ் புகார்
டெல்லி:
தேர்தலில் எங்களோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்ற பின் எங்களைக் கழற்றி விட்டதோடு நில்லாமல் எதிர்க்கட்சிகளை அழிக்கவும் ஜெயலலிதா சதி செய்கிறார் என்று பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) ராமதாஸ் கூறியுள்ளார்.
வாஜ்பாய்க்கு 77வது பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக ராமதாஸ் இன்று (திங்கட்கிழமை) டெல்லிக்கு சென்றார்.அவருடன் பாமக எம்.பி.க்களான பொன்னுசாமி, ஏ.கே.மூர்த்தி, பி.டி.இளங்கோவன், என்.டி.சண்முகம், எம்.துரைஆகியோரும் சென்றனர்.
வாஜ்பாயுடனான சந்திப்பு பற்றி ராமதாஸ் கூறியதாவது:
இலங்கை இனப் பிரச்சினை தீர்வதற்கு இது தான் சரியான தருணம் என்று வாஜ்பாய் கூறினார். இதை இலங்கைபிரதமரிடமும் தெரிவிக்கப் போவதாகவும் பிரதமர் உறுதி அளித்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் எங்களோடு கூட்டணி வைத்துத்தான் அதிமுக அரசால் வெற்றிபெற முடிந்தது.ஆனால் வெற்றி பெற்ற பிறகு எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை. இதனால்தான் நாங்கள் கூட்டணியை விட்டுவெளியேறினோம்.
ஆனால் அதோடு ஜெயலலிதா நிறுத்திக் கொள்ளவில்லை. இப்போது முக்கிய எதிர்க் கட்சிகளை அழிக்கும்முயற்சியிலும் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் அசந்து போய்விட மாட்டோம். ஆண்டிப்பட்டியில் அவரை எதிர்த்துப் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று பாமகதான் முதலில் கூறியது. இதை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்,தமாகா போன்ற கட்சிகளும் கூட ஆமோதித்துள்ளன என்றார் ராமதாஸ்.
தீவிரவாதத்துக்கு எதிராக வாஜ்பாய் அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்போம் என்றும் ராமதாஸ்கூறினார்.