இந்தியாவில் விக்கிரமசிங்கே: வாஜ்பாயுடன் சந்திப்பு
டெல்லி:
இலங்கை தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்து இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன் இலங்கைபிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று (திங்கள்கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இந்திய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், உள்துறை அமைச்சர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஆகியோரையும் ரணில் சந்திக்கவுள்ளார்.
முன்னதாக இந்திய தொழில்-வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறனைச் சந்தித்தார் ரணில். அப்போது இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படாமல்இருப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் பேசினார்கள்.
இலங்கைப் பிரதமராகப் பதவியேற்றவுடன் ரணில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அஸ்திவாரத்தைப்போட்டுள்ளார்.
இலங்கை அமைதிக்கு முதற்கட்டமாக இந்தியாவின் உதவி கட்டாயம் தேவை என்பதை நன்கு உணர்ந்த ரணில்,பதவியேற்ற சில நாட்களிலேயே இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரணிலின் பேச்சுவார்த்தை முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விடுதலைப் புலிகளும் இன்று(திங்கள்கிழமை) நள்ளிரவு முதல் ஒருமாத போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.