கோவை அருகே பெண்ணைத் துப்பாக்கியால் சுட்டு நகை-பணம் கொள்ளை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர், அங்கிருந்தபெண்ணைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோயம்புத்தூர் அருகே அட்டயம்பாளையத்தில் 45 வயதாகும் ஒரு பெண் ரைஸ் மில் நடத்தி வருகிறார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டுப் பின்புறக் கதவருகே ஏதோ சப்தம் வருவதைக் கவனித்த அந்தப்பெண், அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது திடீரென்று ஒரு கொள்ளைக் கும்பல் அந்தப் பெண்ணைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் புகுந்தது.அந்தக் கொள்ளையரைத் தடுப்பதற்கு அந்தப் பெண் கடுமையாகப் போராடியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்களில் ஒருவன், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அந்தப்பெண்ணின் வயிற்றில் சுட்டுள்ளான்.
பின்னர் அந்தப் பெண்ணின் மகனையும் தாக்கிய கொள்ளையர்கள், அவ்வீட்டிலிருந்து நகைகளையும்பணத்தையும் கொள்ளையடித்து விட்டு தப்பியோடி விட்டனர்.
வயிற்றில் குண்டுக் காயமடைந்த அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
அந்தக் கொள்ளையர்கள் இந்தியிலேயே பேசிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கொள்ளையர்களைப் போலீசார்வலைவீசித் தேடி வருகிறார்கள்.