புதுக்கட்சி துவக்கினார் நடிகர் எஸ்.எஸ்.ஆர்.
சென்னை:
பழம் பெரும் நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரன் "பசும்பொன் பார்வர்டு பிளாக்" என்ற புதியக் கட்சியை நேற்று(புதன்கிழமை) தொடங்கினார்.
நடிகர் எஸ்.எஸ்.ஆர். திராவிட இயக்கங்கள் ஆரம்பித்ததிலிருந்தே தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 1962ம்ஆண்டு திமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
1970ல் திமுக ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார். பிறகு 1972ல் எம்.ஜி.ஆர். அதிமுகவை துவக்கிய போதுஇவரும் இணைந்தார். பின்னர் 1980ம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றிபெற்றார்.
பிறகு அரசியலில் இருந்த விலகியிருந்த ராஜேந்திரனை திமுகவும், அதிமுகவும் கண்டு கொள்ளவில்லை.இந்நிலையில், திடீரென்று நேற்று பசும்பொன் பார்வர்டு பிளாக் என்ற பெயரில் ஒரு கட்சியைத் துவக்கி உள்ளார்.
இது குறித்து எஸ்.எஸ்.ஆர். நிருபர்களிடம் கூறியதாவது:
எனது ரசிகர்கள், நலம் விரும்பிகள், நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க புதிய கட்சியை தொடங்கியிருக்கிறேன்.கட்சியின் கொள்கை, திட்டங்கள் குறித்து அவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் அறிவிக்கப்படும்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் எனது பணியையும், புகழையும் பயன்படுத்திக் கொண்டு வீசியெறிந்து விட்டன.இதனால் இரு கட்சிகள் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது என்று ராஜேந்திரன் கூறினார்.