சோனியா, வைகோ நாளை குஜராத் பயணம்
டெல்லி:
குஜராத்தில் நடந்த வன்முறைகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள், சொத்து இழப்புகள் குறித்து நேரில் பார்வையிடவும்,மாநில அரசும் போலீசும் செயல்பட்ட விதம் குறித்து விசாரிக்கவும் சோனியா காந்தி தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் குழு நாளை அங்கு சென்கின்றனர்.
இந்தக் குழு வன்முறை தாண்டவமாடிய அகமதாபாத், ரயில் எரிக்கப்பட்ட கோத்ரா ஆகிய இடங்களுக்குச் செல்வர்.
மருத்துவமனைகளுக்கும், மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் இந்தக் குழு செல்லும். முதல்வர்மோடியையும் சந்தித்துப் பேசும்.
இக் குழுவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, மதிமுக தலைவர் வைகோ, திமுக எம்.பி. பழனிமாணிக்கம், பா.ஜ.க.தலைவர்களில் ஒருவரான பிரமோத் மகாஜன், அதிமுக எம்.பி. பி.எச். பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. எர்ரன் நாயுடு, முஸ்லீம் லீக்கின் பனத்வாலா,சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜேட்லி உள்பட 21 பேர் இடம் பெற்றுள்ளனர்.
குஜராத்தில் வி.பி.சிங், குஜ்ரால்:
முன்னாள் பிரதமர்களான வி.பி.சிங், குஜ்ரால் ஆகியோர் இன்று குஜராத் சென்று கலவரப் பகுதிகளையும்,பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
காஞ்சி சங்கராச்சாரியார்:
குஜராத்தில் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ள காஞ்சி சங்கராச்சாரியார் சிறப்பு விமானம் மூலம்அகமதாபாத் சென்றார். அவர் அங்கு அனைத்து மதத்தினருடனும் பேச்சு நடத்தி வருகிறார்.