மதுரை: சினிமா ஸ்டைலில் போலீசாரை தாக்கி 2 அல்-உம்மா கைதிகள் கடத்தல்
மதுரை:
மதுரை அருகே போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டுகளை வீசி 2 அல்-உம்மா கைதிகளை டாடா சுமோ காரில்வந்தவர்கள் கடத்திச் சென்றனர்.
சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகக் குண்டு வெடிப்பு உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள்இமாம் அலி (32) மற்றும் ஹைதர் அலி (35). இவர்கள் இருவரும் அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் 2 பேருமே சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று (வியாழக்கிழமை) இவர்கள்மீதான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதேபோல் இவர்கள் மீதான ஒரு வழிப்பறி வழக்குஇன்று கோவில்பட்டி நீதிமன்றத்தில் நடக்க இருந்தது.
அதற்காக இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகிய 2 பேரையும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டைக்குபோலீசார் அழைத்துச் சென்று புதன்கிழமை இரவு சிறையில் அடைத்தனர்.
பின்னர் நேற்று காலை அவர்கள் 2 பேரையும் போலீசார் மதுரைக்கு அழைத்து வந்து 3வது கூடுதல் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அண்ணாமலை விசாரணையை வரும் 28ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
பின்னர் இமாம் அலியையும் ஹைதர் அலியையும் பாளையங்கோட்டைக்கு மீண்டும் கொண்டு செல்வதற்காகப்போலீசார் புறப்பட்டனர். மதிய உணவிற்காக திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் அவர்கள் சென்ற வேன்நிறுத்தப்பட்டது.
இமாம் அலி மற்றும் ஹைதர் அலியுடன் 4 போலீசார் வேனிலேயே சாப்பிட்டு முடித்தனர். மற்றவர்கள் ஓட்டலுக்குச்சாப்பிடச் சென்று விட்டனர்.
அப்போது திடீரென்று போலீஸ் நிலையம் அருகே ஒரு டாடா சுமோ கார் வந்து நின்றது. அதிலிருந்து 4 பேர்கைகளில் இயந்திரத் துப்பாக்கியைப் பிடித்தவாறு மளமளவென்று இறங்கி வந்தனர்.
பின்னர் அந்த 4 பேரும் திடீரென்று போலீஸ் வேன் மற்றும் ஜீப் ஆகியவை மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.பயங்கரச் சத்தத்துடன் அந்த வெடிகுண்டுகள் வெடித்ததில், வேன் மற்றும் ஜீப் ஆகியவற்றின் கண்ணாடிகள்உடைந்து நொறுங்கின.
அப்போது அங்கு ஏற்பட்ட கடும் புகை மண்டலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இமாம் அலியும் ஹைதர் அலியும்வேனை விட்டு இறங்கி ஓடினர்.
இவர்களைத் தடுக்க முயன்ற போலீசாரைக் காரில் வந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கேசவன் என்றபோலீசார் குண்டடி பட்டு சாய்ந்தார்.
பின்னர் இமாம் அலியும் ஹைதர் அலியும் மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று காரில் ஏறிக் கொள்ள, அதில் இருந்தநபர்கள் மீண்டும் அப்பகுதியில் குண்டுகளை வீசிவிட்டு காரைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டனர்.
இந்த திடீர்ச் சம்பவத்தால் அதிர்ந்து போன போலீசார், சுதாரித்துக் கொண்டு அந்தக் காரைத் துரத்தினர்.திருமங்கலத்தை அடுத்துள்ள ரிங் ரோடு வழியாகச் சென்ற கார், அதற்கு மேலே செல்ல முடியாமல் வாழைத் தோப்புஅருகே சாக்கடை தோண்டுவதற்காக அமைக்கப்பட்ட பள்ளத்தினருகே நின்று விட்டது.
இதையடுத்து காரிலிருந்து இறங்கிய தீவிரவாதிகள் அனைவரும் போலீஸ் ஜீப்பை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஓடினார்கள். இதனால் அந்த ஜீப் நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் சாய்ந்தது.
ஆனால் அதற்குள் அங்கிருந்த ஒரு ஆட்டோ டிரைவரை மிரட்டி அந்தத் தீவிரவாதிகள் அந்த ஆட்டோவிலேயேதப்பிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து அந்த டாடா சுமோ காரைக் கைப்பற்றிய போலீசார் அந்தத் தீவிரவாதிகளைப் பிடிக்க தமிழகம்முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அந்தக் காரிலிருந்து சில துப்பாக்கிகள், கத்திகள் போன்றவையும்கைப்பற்றப்பட்டன.
தப்பிச் சென்ற தீவிரவாதிகளைப் பற்றிய தகவல் கொடுத்தால் தகுந்த பரிசு வழங்கப்படும் என்று தமிழக டி.ஜி.பி.நெய்ல்வால் நேற்று இரவு அறிவித்தார்.
இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக 2 பேரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.