அயோத்தியில் பூஜைக்கு அனுமதியில்லை: வாஜ்பாய்
டெல்லி:
அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அங்கு பூமி பூஜை நடத்துவதற்கு மத்திய அரசுஅனுமதிக்காது என்று பிரதமர் வாஜ்பாய் இன்று (திங்கள்கிழமை) நாடாளுமன்றத்தில் கூறினார்.
வரும் 15ம் தேதி பூமி பூஜை கட்டாயம் நடந்தே தீரும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருப்பதைத்தொடர்ந்து, இன்று நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியதிலிருந்தே கூச்சலும் குழப்பமும் நிலவியது.
முன்னாள் பிரதமர் தேவ கெளடா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட எதிர்க் கட்சிஉறுப்பினர்கள் மக்களவையின் மையப் பகுதி வரை வந்து கோஷங்களை எழுப்பினார்கள்.
அயோத்தி பிரச்சனை தொடர்பாக உடனடியாக ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும்அவர்கள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆனால் சபாநாயகர் பி.எம். சயீது அதை நிராகரித்து விட்டார்.
இதற்கிடையே ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களும் எதிர்க் கட்சி உறுப்பினர்களும் சுமார் 45நிமிடங்களுக்கு கடும் வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொண்டனர்.
இதையடுத்து வாஜ்பாய் தலையிட்டு பேசியதாவது:
வரும் 13ம் தேதி (புதன்கிழமை) இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடக்கவுள்ளது. அதன் தீர்ப்புவெளியாகும் வரை அயோத்தியில் பூமி பூஜை நடத்த மத்திய அரசு அனுமதிக்காது.
இந்தப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் நிச்சயம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கும்.
மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடப்பதாக ராமஜென்மபூமி டிரஸ்ட் எழுத்து பூர்வமாக சம்மதித்துள்ளது.
அதே நேரம் அயோத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை நிலைநாட்டப்படும். சுமார் 3,200 மத்திய பாதுகாப்புப் படைபோலீசார் உள்பட 5,000க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரச்சனையைத் தீர்க்க காஞ்சி சங்கராச்சாரியார் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றார்வாஜ்பாய்.
இதற்கிடையே பூமி பூஜை நடத்த மத்திய அரசு அனுமதியளித்தால் அதை ஆதரிக்கப் போவதில்லை என்றுதெலுங்கு தேசம், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் குரல் கொடுத்துள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications