தமிழக மீனவர்களை மீண்டும் கடத்திய ஆந்திர ரவுடிகள்
சென்னை:
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மீனவர்களை, ஆந்தி மாநில கடல் ரவுடிகள் மீண்டும் கடத்திச்சென்று பணம் பறித்த பின் திருப்பி அனுப்பியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த மீனவர்களை அடிக்கடி ஆந்திர மாநலத்தைச் சேர்ந்த ரவுடிகள் கடத்திச் சென்று பணம் பறித்துவருகின்றனர். இதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய் விட்டது.
மீனவர்கள் கடத்திச் செல்லப்படும் போதெல்லாம், சென்னை மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆந்திராவிற்குச் சென்றுஅந்த ரவுடிகள் கேட்கும் பணத்தைக் கொடுத்து விட்டு மீனவர்களை மீட்டு வருகிறார்கள்.
கடத்தல் குறித்து போலீஸில் யாரும் புகார் கொடுப்பதில்லை என்பதால் போலீஸாரும் இதில் தலையிடுவதில்லை.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் 60க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை வழக்கம் போல ரவுடிகள் கடத்திச்சென்று விட்டனர். ராயபுரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்றவர்கள் இந்த மீனவர்கள்.
தங்களது எல்லைக்குள் வந்து இம்மீனவர்கள் மீன் பிடித்ததாக வழக்கம் போல அந்த ரவுடிகள் குற்றம் சாட்டினர்.
இந்தத் தகவல் அறிந்ததும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாட்ட மீனவர் சங்கத்தின் பிரதிநிநதிகளும்வழக்கம் போல ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணப்பட்டனத்திற்கு விரைந்தனர். அங்கு கடல்ரவுடிகளுடன் பேச்சு நடத்தி ரூ.80,000 கொடுப்பதாக ஒத்துக் கொண்டனர்.
அதன் பிறகு தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன், வலைகள் ஆகியவற்றைப் பறித்துக் கொண்ட கடல்ரவுடிகள், மீனவர்களை மட்டும் விடுவித்தனர். வெறும் கையுடன் தமிழக மீனவர்கள் மீண்டும் சென்னை வந்துசேர்ந்தனர்.












Click it and Unblock the Notifications