திமுகவின் கேலிக்கூத்து: வாருகிறார் சிதம்பரம்
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்து கொண்டு வரக் கோரி தமிழகசட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்காமல் நடுநிலை வகித்த திமுகவின் செயல்கேலிக்கூத்தானது என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் பொதுச் செயலாளரான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கோவா மாநாட்டில் பிரதமர் வாஜ்பாய் பேசும்போது, முஸ்லீம்களுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்துள்ளார். மதச்சார்பின்மை கொள்கையைக் கொண்டுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இதை எண்ணிப் பார்க்கவேண்டும். பாஜகவுக்கு ஆதரவு தருவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
பாரதீய ஜனதாக் கட்சி மதவாதக் கட்சி. அந்தக் கட்சிக்கு எந்தக் கட்சியும் ஆதரவு தரக் கூடாது. பாஜகவுக்கு ஆதரவுதரும் கட்சியும் கூட மதவாதக் கட்சியாகத்தான் இருக்க முடியும்.
பிரபாகரனைக் கைது செய்து கொண்டு வரவேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தபோது, தாங்கள் நடுநலை வகிப்பதாக திமுக அறிவித்தது. இது மிகவும் கேலிக்கூத்தான செயலாகும்.
நடுநலை என்ற ஒரு நிலையே உண்மையில் கிடையாது. அதை ஒரு நிலைப்பாடு என்றே கூட எடுத்துக் கொள்ளமுடியாது. எனவே மக்களைக் குழப்பும் விதமாகவே திமுக நடந்து கொண்டுள்ளது.
சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். பிரபாகரனை நாம் நாடு கடத்தமுடியாதுதான். ஆனால் அதற்காக விடுதலைப்புலிகளுக்கு எதிரான நமது உணர்வுகளை மாற்றிக் கொள்ள முடியாதுஅல்லவா என்றார் சிதம்பரம்.