புலிகள் மீதான தடையை நீக்க அமெரிக்கா மறுப்பு
கொழும்பு:
விடுதலைப்புலிகளின் மீதான தடையை இலங்கை அரசு நீக்கினாலும் தாங்கள் நீக்கப் போவதில்லை என்றுஅமெரிக்கா அறிவித்துள்ளது.
தங்கள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கினால்தான் தாய்லாந்தில் நடக்கவிருக்கும் அமைதிப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம் என்று புலிகள் கூறியிருந்தனர்.
இந்தத் தடையை முதலில் இலங்கை அரசு நீக்கினால்தான் மற்ற நாடுகளும் அதை நீக்க முன் வரும் என்று கடந்த10ம் தேதி நடந்த சர்வதேசப் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளைபிரபாகரன் கூறியிருந்தார்.
புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து வேகமாகப் பரிசீலனை செய்து வருவதாக இலங்கை பிரதமரான ரணில்விக்கிரமசிங்கே சமீபத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் புலிகள் மீதான தடை தொடர்ந்து நீடிக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனாலும் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையை தாங்கள் முழு மனதுடன் வரவேற்பதாகவும் அமெரிக்கத்தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவில் பல அரசியல் கட்சிகளும் தொடர்ந்து புலிகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருவதையடுத்து,எக்காரணத்தைக் கொண்டும் புலிகள் மீதான தடையை நீக்கப் போவதில்லை என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்துவிட்டார்.
புலிகளுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழக அரசு, பிரபாகரனைப் பிடித்துக் கொண்டு வரவேண்டும்என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.