"கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத மைக்": சட்டசபையில் வித்தியாசமான கோரிக்கை
சென்னை:
சட்டசபையில் உள்ள உயரமான எம்.எல்.ஏக்களுக்கு வசதியாக உயரமான மைக்குகளை அமைக்க வேண்டும் என்றுசுயேச்சை எம்.எல்.ஏவான அப்பாவு வித்தியாசமான கோரிக்கையை எழுப்பினார்.
தன்னைத் தவிர நெப்போலியன், சந்தானம் போன்ற எம்.எல்.ஏக்களும் உயரமாக இருப்பதால், சட்டசபையில்குனிந்து கொண்டே பேசுவதற்குக் கஷ்டமாக உள்ளது என்றார் அப்பாவு.
எனவே சபாநாயகரை நேரடியாகப் பார்த்துப் பேசுவதற்கு வசதியாக மைக்கின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்என்று அப்பாவு கோரிக்கை விடுத்தார்.
""பணிவாகப் பேசவேண்டும் என்பதற்காகத்தான் கட்டையான மைக் தரப்பட்டுள்ளது"" என்று சிரித்துக் கொண்டேகூறிய சபாநாயகரான காளிமுத்து, மைக்கின் உயரம் அதிகரிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
""ஆள் வரலேன்னா சீட்டைப் பிடிப்பதா?"":
இதற்கிடையே தமாகா எம்.எல்.ஏவான ஹக்கீம், வேறு ஒரு உறுப்பினரின் இருக்கையில் அமர்ந்து கேள்விகேட்டதால் சபையில் கலகலப்பு ஏற்பட்டது.
சட்டசபை கேள்வி நேரத்தின்போது விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ. தாமோதரன் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.ஆனால் அவருடைய வாய்ப்பின்போது அவர் சீட்டில் இல்லை.
இதனால் அவரது சீட்டில் மற்றொரு தமாகா எம்.எல்.ஏவான ஹக்கீம் நின்று கொண்டு ஒரு கேள்வியைக் கேட்டார்.
அப்போது குறுக்கிட்ட திமுக எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம், ""எந்த உறுப்பினரும், யாருடைய இருக்கையில் இருந்துகொண்டும் கேள்வி கேட்கலாமா?"" என்றார். அப்போதுதான் ஹக்கீம் இடம் மாறியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஹக்கீமைப் பார்த்து, ""உங்கள் இருக்கை எது? நீங்கள் எங்கே நின்று கொண்டு பேசுகிறீர்கள்?""என்றார் காளிமுத்து. ""தாமோதரன் வரவில்லை, அதனால்தான் அவரது கேள்வியை அவரது இருக்கையில் நின்றுகொண்டு கேட்டேன்"" என்றார்.
""ஆள் வரவில்லை என்பதற்காக அவரது இருக்கையை ஆக்கிரமிப்பதா? உடனே உங்களது இருக்கைக்குப்போங்கள்"" என்று சிரித்துக் கொண்டே காளிமுத்து கூறியதைக் கேட்டதும் சபையே சிரிப்பலையில் மூழ்கியது.
ஹக்கீம் தனது இருக்கைக்குப் போகும் வரை எம்.எல்.ஏக்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.