த.மா.கா. எம்எல்ஏ நீக்கத்துக்கு இடைக் காலத் தடை
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து கிள்ளியூர் எம்.எல்.ஏ. குமாரதாஸ் நீக்கப்பட்டது செல்லாது என்று சென்னை கோர்ட்உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சட்டசபையில், தமாகா எம்.எல்.ஏக்கள் வரிசையிலேயே மீண்டும் குமாரதாஸுக்கு இடம்ஒதுக்கப்பட்டுள்ளது.
இது அக் கட்சியின் தலைவர் வாசனுக்கு விழுந்த மிகப் பெரிய அரசியல் அடியாகக் கருதப்படுகிறது.
கிள்ளியூர் தொகுதி தமாகா எம்.எல்.ஏ. குமாரதாஸ். இவர் த.மா.காவை காங்கிசுடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இதுதொடர்பாக வாசனை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு இவர் இவ்வாறு பேசி வருவதாக த.மா.காவினர் கூறிவந்தனர். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக சமீபத்தில் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இதையடுத்து குமாரதாஸ் எந்தக் கட்சியையும் சாராத உறுப்பினர் என்று சட்டசபையில் சபாநாயர் காளிமுத்துவால் அறிவிக்கப்பட்டார்.
இந் நிலையில், தன்னை கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை 6வது சிவில் நீதிமன்றத்தில் வழக்குப்போட்டார் குமாரதாஸ். இந்த வழக்கில் தமாகா கட்சித் தலைமையின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து தன்னை மீண்டும் தமாகா எம்.எல்.ஏவாக அங்கீகரித்து, தமாகா உறுப்பினர்கள் உள்ள பகுதியிலேயே இடம் ஒதுக்கித் தருமாறுசபாநாயகர் காளிமுத்துவுக்கு கோரிக்கை விடுத்தார் குமாரதாஸ்.
இதை ஏற்றுக் காண்ட சபாநாயகரும், தமாகா உறுப்பினர்கள் வரிசையிலேயே குமாரதாஸுக்கு மீண்டும் இடம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.