ரிமோட் கண்ட்ரோல் சபாநாயகர்
டெல்லி:
சிவசேனா கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷி இன்று மக்களவைத் தலைவராக போட்டியின்றி, அதே நேரத்தில் கடும்எதிர்ப்புகளுக்கிடையே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மத்திய அமைச்சர் மனோகர் ஜோஷியின் சார்பில் புதன்கிழமை 2 வேட்பு மனுக்களும் வியாழக்கிழமை 10 வேட்பு மனுக்களும்தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனு தாக்கல் செய்வதற்குரிய கடைசி நாளான வியாழக்கிழமை பிற்பகல் 12 மணி வரைஜோஷிக்கு மட்டும் தான் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் இவர் இன்று லோக்சபாவின் 13வது சபநாயகராக குரல் ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், சிவ சேனை மாதிரியான ஒரு மதவாத கட்சியின் உறுப்பினரை சபாநாயகராக்குவதை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. வழக்கமாக சபாநாயகரின் பெயரை ஆளும் கட்சி முன்மொழியும், எதிர்க் கட்சிகள்வழிமொழியும். இது மரபாக இருந்து வந்தது. ஆனால், தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் அவரது பெயரை வழிமொழியஎதிர்க் கட்சிகள் மறுத்துவிட்டன.
எனவே, ஜோஷியின் முதல் மனுவை பிரதமர் வாஜ்பாய் முன்மொழிய உள்துறை அமைச்சர் அத்வானி வழிமொழிந்தார்.
இரண்டாவது மனுவை பாதுகாப்பு அமைச்சர் பெர்ணான்டஸ் முன்மொழிய, தெலுங்கு தேசம் கட்சி எர்ரன் நாயுடு வழிமொழிந்தார்.
இதர வேட்பு மனுக்களை ஆளுங்கூட்டணி கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேசிய மாநாட்டுக் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், மதிமுக, பாமக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ்,பாரிபா பகுஜன் போன்ற எதிர்கட்சித் தலைவர்களும் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் தாக்கல் செய்தனர்.
எதிர்கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் போன்ற கட்சிகள் ஜோஷியை ஆதரித்துவேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அவரது மனுவை வழிமொழியவும் இல்லை.
சபாநாயகராக இருந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பாலயோகி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்துஇந்த புதிய சபாநாயகர் தேர்வு நடந்தது. ஜோஷி நேற்று முன்தினம் வரை மத்திய அமைச்சரவையில் கனரக தொழில்துறைஅமைச்சராக இருந்தார். சபாநாயகராகத் தேர்வு செய்யப்படுவதால் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்து பிரதமர்வாஜ்பாயிடம் கடிதம் கொடுத்தார்.
இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஷியை பிரதமர் வாஜ்பாயும் எதிர்க் கட்சித் தலைவர் சோனியாகாந்தியும் சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
பாரபட்சம் இல்லாமல், அவையின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் ஜோஷி செயல்படுவார் என நம்புவதாக பிரதமர் வாஜ்பாய்கூறினார்.
சோனியா காந்தி கூறுகையில், மக்களைப் பாதிக்கும் பொதுப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தந்து அவையை ஜோஷி நடத்தவேண்டும் என்றார்.
ரிமோட் கண்ட்ரோல்:
மும்பை மேயராகவும், மகாராஷ்டிர முதல்வராகவும் இவர் இருந்துள்ளார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேக்கு மிகவும்பணிந்தவர்.
இவர் மகாராஷ்டிர முதல்வராக இருந்தபோது, பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா இயக்கிய மாதிரி, இவரை தாக்கரே தான் ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயக்கி வந்தார்.
அது மாதிரி இப்போதும் ரிமோட் கண்ட்ரோல் சபாநாயகர் ஆகிவிடாதீர்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரான இந்திரஜித் குப்தா நாடாளுமன்றத்தில் இன்று ஜோஷியைப் பாராட்டிப் பேசும்போது கூறிப்பிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜோஷி, நான் ரிமோட் கண்ட்ரோலுக்கு பணியும் சபாநாயகராக இருக்க மாட்டேன். என்னைஅரசியலுக்குக் கொண்டு வந்தவரும் என்னை வளர்த்தவரும் பால்தாக்கரேஜி தான் என்றார்.
தமிழக அரசியல் ஸ்டைலில் பால்தாக்ரேயின் காலில் விழுந்து ஆசி வாங்கிவிட்டுத் தான் எந்த வேலையையும் செய்வார் இவர்.