இன்று ராஜிவ் நினைவு நாள்: ஸ்ரீபெரும்புதூரில் அஞ்சலி
ஸ்ரீபெரும்புதூர்:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 11வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதையடுத்து,ஸ்ரீபெரும்புதூரில் இன்று காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி தான் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போது, மனித வெடிகுண்டு வெடித்து ராஜிவ் உடல் சிதறிப் பலியானார்.
ராஜிவ் நினைவு நாளையொட்டி அவர் இறந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்இளங்கோவன், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் தங்கபாலு மற்றும் தமாகாதலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் இன்று சென்று மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அனைவரும் பயங்கரவாத உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சர்அருணாசலம் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் இந்த அஞ்சலி நிகழ்ச்சியில்பங்கேற்றனர்.
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு சரியான நேரத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்ற வாழப்பாடிராமமூர்த்தி, அவரைப் பிடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளாவிட்டால் அதைஎதிர்த்துப் போராட்டம் நடத்துவோம் என்றார்.
பின்னர் பெங்களூரிலிருந்து கொண்டு வரப்பட்ட "ராஜிவ் ஜோதி"யை இளங்கோவன் பெற்றுக் கொண்டார். ராஜிவ்நினைவு நாளையொட்டி அங்கு பல்வேறு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன.
இதற்கிடையே சென்னையில் பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம்தலைமையில் அமைச்சர்கள் பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
அதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கலெக்டர் தலைமையில் பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
டெல்லியில் சோனியா அஞ்சலி:
இதற்கிடையே டெல்லியில் ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் அவருடைய மனைவியும் காங்கிரஸ்தலைவருமான சோனியா காந்தி.
ராஜிவ் நினைவு நாளையொட்டி "சத்பவானா பேரணி"யிலும் சோனியா கலந்து கொண்டார்.