முஷாரப்பின் பேச்சால் பதற்றம் அதிகரித்துள்ளது: ஜஸ்வந்த் சிங்
டெல்லி:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான முஷாரப்பின் பேச்சு ஆபத்தானது என்றும் இதனால் எல்லையில் பதற்றம்தான் அதிகரித்துள்ளது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
தன்னுடைய நாட்டு மக்களுக்கு முஷாரப் நேற்றிரவு ஆற்றிய உரையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைபாகிஸ்தான் தூண்டவில்லை என்றும் இந்தியா தான் போரைத் தூண்டி விடுகிறது என்றும் கூறியிருந்தார்.
முஷாரப்பின் பேச்சு இந்தியாவுக்குக் கோபத்தைத் தான் அளித்துள்ளது என்று வெளியுறவுத்துறை இணைஅமைச்சரான ஒமர் அப்துல்லா நேற்றே கூறிவிட்டார்.
இந்நிலையில் முஷாரப்பின் பேச்சுக்கு இந்தியாவின் முறையான பதிலை அறிவிப்பதற்காக ஜஸ்வந்த் சிங்பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கூட்டினார். அப்போது அவர் கூறியதாவது:
முஷாரப்பின் பேச்சு மிகவும் ஆபத்தானது. அவருடைய இந்தப் பேச்சின் மூலம் அவர் மீதான நம்பிக்கையைஇந்தியா இழந்து விட்டது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க எந்தவிதமான நடவடிக்கையையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை.வெறும் வாய்ப் பேச்சளவில் தான் முஷாரப் கூறி வருகிறார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டு வந்து விட்டோம் என்பதை முஷாரப் உறுதிப்படுத்த வேண்டும்.
முஷாரப்பின் பேச்சினால் தற்போது எல்லையில் பதற்றம் தான் அதிகரித்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் பயங்கரவாதம்அங்கே தான் மையம் கொண்டுள்ளது என்பதையும் உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்ட போதும், கடந்த 14ம் தேதி ஜம்மூ அருகேகலுச்சாக்கில் ராணுவ முகாம் தாக்கப்பட்ட போதும் நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று தான் உலகநாடுகள் கேட்டுக் கொண்டன.
ஆனால் அதற்குப் பிறகும் முஷாரப்பின் பேச்சில் எந்தவிதமான மாறுதலும் இல்லாததால் இந்தியாவின் பொறுமைஎல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இனிமேலும் இந்தியாவால் பொறுமையாக இருக்க முடியாது. உரியநேரத்தில் உரிய நடவடிக்கைகளை இந்தியா கட்டாயம் எடுக்கும்.
அணு ஆயுதப் போர் குறித்து இந்தியா எப்போதுமே எதுவும் கூறவில்லை. தீவிரவாதிகளைக் கொண்டும் அணுஆயுதங்களைக் கொண்டும் பாகிஸ்தான் தொடர்ந்து மிரட்டி வருகிறது. முஷாரப்பும் அவருடைய அமைச்சர்களும்தான் அணு ஆயுதப் போர் குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர். உலக நாடுகள் இதைக் உற்றுக் கவனிக்கவேண்டும். போர் வருவதும் வராததும் முஷாரப்பின் கையில் தான் உள்ளது.
டிசம்பர் 13 தாக்குதலின் போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றுபாகிஸ்தானுக்கு எந்தவிதமான நேரக் கெடுவும் விதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது நேரம் கடந்துகொண்டிருக்கிறது என்றார் ஜஸ்வந்த் சிங்.
இதற்கிடையே முப்படைகளின் தளபதிகளை இன்று சந்தித்துப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ், நாட்டின் பாதுகாப்பு குறித்து அவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
சுமார் இரண்டு மணி நேரம் இந்த ஆலோசனை நீடித்தது.












Click it and Unblock the Notifications