அதிமுகவினர் கள்ள ஓட்டு: சைதையில் மறு தேர்தல்?
சென்னை:
சைதாப்பேட்டையில் மிக அதிக அளவில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டன. பல்வேறு வாக்குச் சாவடிகளை அதிமுகவினர்கைப்பற்றி சரமாறியாக கள்ள ஓட்டுப் போட்டனர்.
இதனால் அங்கு சுமார் 80 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து 3தேர்தல் பார்வையாளர்கள் இன்று விசாரணை நடத்தி அறிக்கை தந்த பின்னர் தேர்தல் கமிஷன் இறுதி முடிவெடுக்கும்.
போலி சாதிச் சான்றிதழைக் காட்டி ஏராளமான அதிமுகவினர் ஓட்டு போட்டதால் தேர்தல் கமிஷன் இந்த நடவடிக்கையைஎடுத்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை புறக்கணிப்பு:
மேலும் இந்தத் தொகுதியில் முழுவதுமாகவே மறுதேர்தல் நடத்த வேண்டும் என திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரியுள்ளன.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறையின்ஒத்துழைப்போடு, வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி தங்களது வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவினர் அதிக அளவில் கள்ளஓட்டுக்களைப் போட்டுள்ளனர்.
எனவே வாக்கு எண்ணிக்கையைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இங்கு மறு தேர்தல் நடத்துவதுதான் ஜனநாயகத்திற்குநல்லதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நல்லகண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில், சைதாப்பேட்டை தொகுதியில்அதிமுகவினர் அராஜக முறையில் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி ஏராளமான அளவுக்கு கள்ள ஓட்டுக்களைப் போட்டுள்ளனர்.எனவே இங்கு மறு தேர்தல் நடத்துவதே நல்லது என்று கூறியுள்ளார்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிரப்பாக்கம் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை நடந்த இடைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது கண்ட சில சுவாரஸயமான காட்சிகள் ...
- சைதாப்பேட்டையில் மதிமுக வேட்பாளர் பா.சுப்ரமணியம் வாக்குச் சாவடிகளைப் பார்வையிடுவதற்காக தொண்டர்களுடன் 135-வது வட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த அதிமுகவினர், மதிமுக வேட்பாளரைத் தாக்க முயன்றனர். அவர்களை மதிமுக தொண்டர்கள் தலையிட்டுக் காப்பாற்றி அழைத்துச் சென்றனர். உடனடியாக அங்கு போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.
- சைதை தொகுதிக்குட்பட்ட பாத்திமா பள்ளியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தாசில்தார் கொடுத்த சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ்களுடன் திடீரென ஏராளமானோர் வாக்களிக்க வந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் போலி வாக்காளர்கள் என திமுக பூத் ஏஜென்டுகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை வெளியேற்ற போலீஸார் மறுத்ததால் பதட்டம் அதிகரித்தது.
- அச்சிரப்பாக்கம் தொகுதியின் கீழ் வரும் புத்திரன்கோட்டை என்ற பகுதியில் வாரச் சந்தை நடப்பது வழக்கம். ஆனால் தேர்தலையொட்டி அது ரத்து செய்யப்பட்டிருந்தது. இது தெரியாத சில விவசாயிகள் லாரிகளில் காய்கறி வாங்க சந்தைக்கு வந்தனர். அவர்களை கள்ள ஓட்டுப் போட வந்தவர்கள் என்று கருதிய போலீஸார் லாரிகளை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். தேவையில்லாமல் அடி வாங்கிக் கொண்டு கலைந்து சென்றனர் விவசாயிகள்.
- அச்சிரப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட சூனாம்பேடு பகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்கு வெளியே நின்று அதிமுக வேட்பாளர் பூவராகமூர்த்தி, இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கோரிக் கொண்டிருந்தார். இதை அறிந்த பா.ம.க. தொண்டர்கள் திரளாக அங்கு திரண்டு சென்றனர். போலீஸார் விரைந்து வந்து மோதல் ஏற்படாமல் தடுத்தனர்.
வாணியம்பாடியில் பிற்பகல் 12 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் வாக்காளர்கள் ஒதுங்கத் தொடங்கினர். இதனால் வாக்குப் பதிவு சுமார் 1 மணி நேரத்திற்கு படுமந்தமானது. மழை நின்ற பின்னர் மீண்டும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
வாணியம்பாடியில் அதிக வாக்குப் பதிவு:வெள்ளிக்கிழமை நடந்த இடைத் தேர்தலில் வாணியம்பாடியில் தான் அதிக அளவால் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சைதாப்பேட்டையில் 52 சதவீதமும் அச்சிரப்பாக்கத்தில்56 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.