திருச்சி அருகே ஓடும் ரயிலில் தீ: அதிர்ஷ்டவசமாய் பயணிகள் தப்பினர்
திருச்சி:
விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள்ஓடிக் கொண்டிருந்த ரயிலில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினர்.
திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ஸ்ரீரங்கம் அருகே இந்தச் சம்பவம் நடந்தது.
இந்த பாஸஞ்சர் ரயில் காலை விழுப்புரத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது ஒரு பெட்டியின் சில சக்கரங்கள் திடீரென சுற்றவில்லை.
அவை தண்டவாளத்தில் சுழலாமல் உரசிக் கொண்ட வந்தன. இதனால் பயங்கர சத்தத்துடன் தீப்பொறிகள் பறந்தன.தொடர்ந்து அந்தப் பெட்டியில் தீ பிடித்துக் கொண்டது.
அப்போது ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை அந்த ரயில் நெருங்கிவிட்டது. தீ பிடித்தது குறித்து டிரைவருக்குத்தெரியவில்லை. ஆனாலும் நிலையத்தை நெருஙகிவிட்டதால் ரயில் மிக மிக மெதுவாகவே சென்றுகொண்டிருந்தது.
ரயில் பெட்டியின் கீழிருந்து தீ மளமளவென மேலே பரவியது. இதையடுத்து பயணிகள் அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தனர்.
அதற்குள் ரயில் நிலையத்துக்குள் சென்ற ரயில் நின்றுவிட்டது. உடனே பயணிகள் உடமைகளைவிட்டு விட்டுஇறங்கி ஓடினர்.
உடனே ரயில் நிலையத்தில் இருந்த பொது மக்களும் ஊழியர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.அதற்குள் ரயில் நிலைய தீயணைப்புப் படை வண்டிகளும் அங்கு வந்துவிட்டன. இதையடுத்து தீ உடனடியாகஅணைக்கப்பட்டுவிட்டது.
இந்த விபத்தில் யாரும் காயமடைவில்லை. பிற ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை.
இச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.