போர் ஒத்திகை தீவிரம்
காஷ்மீர் & முஸாஃபராபாத்:
இந்தியா இரவு நேரத்தில் விமானத் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின்முக்கியமான பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டு அமலாக்கப்பட்டு வருகிறது.
அதே போல காஷ்மீரில் இந்தியாவும் மின்வெட்டை அமல் செய்து போர் ஒத்திகைக்கு மக்களை தயார் செய்யஉள்ளது. இன்று இரவு முதல் இந்த ஒத்திகை ஆரம்பிக்கிறது.
போர்க் காலங்களில் எதிரி நாட்டு விமானத் தாக்குதல்களை சமாளிக்க இதுபோல நாட்டை இருட்டடிப்பு செய்வது வழக்கம்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதி தான் தீவிரவாதிகளின் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது. இங்குஆயிரக்கணக்கான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி தந்து வருகிறது. இதற்காக இந்தப் பகுதி முழுவதும்நூற்றுக்கணக்கான தீவிரவாத முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீவிரவாதிகள் விஷயத்தில் பாகிஸ்தான் பணியாவிட்டால் இந்த முகாம்களை இந்தியா போர் விமானங்கள் மூலம தாக்கத்திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இந்தப் பகுதியை இருட்டடிப்பு செய்ய ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான் அரசு.
இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதி இரவு முழுவதும் இருளில் மூழ்கிக் கிடப்பதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. மேலும்போர்க்கால எச்சரிக்கை விடுக்கும் வகையில் விமானத் தாக்குதல் அபாயத்தை அறிவிக்கும் சைரன்களும் இரவு முழுவதும்ஒலிக்கப்பட்டு ரிகர்சல் பார்க்கப்படுகின்றன.
இந்த சைரன் ஒலித்தவுடன் மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது. மின்வெட்டு ஏற்படாவிட்டாலும் வெளிச்சமாகவிளக்குகளை உடனே அணைக்க வேண்டும் என்று அனைவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் இரவுகளில் முஷாஃபராபாத் மாவட்டம் முழுவதுமே இருளில் மூழ்கி விடுகிறது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள தேசிய கிரிட்டிலிருந்து தான் இந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுவருகின்றது. அங்கிருந்தே மின்சாரத்தை நள்ளிரவு முதல் அதிகாலை வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு விடுகிறது.
இந்தியாவிலும்...
இந்தியாவிலும் ஜம்மு போன்ற முக்கியமான பகுதிகளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது.போர் நடக்கும் போது மக்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு ஒத்திகை பார்ப்பதற்காக இந்த மின்சாரத்தடை ஏற்படும். போர்போன்றே சைரன்களை ஒலிக்கச் செய்து, மக்களை தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் இந்த ஒத்திகைஆரம்பிக்கிறது.