மழை விட்டும் தூவானம் ஒயவில்லை...
சென்னை:
சைதாப்பேட்டை தேர்தல் விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. தேர்தல் வெற்றி-தோல்வி குறித்து திமுகவும் அதிமுகவும் தீவிர அறிக்கைப்போரில் ஈடுபட்டுள்ளன.
சைதாப்பேட்டையில் 58 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடந்தது. இதனால் அரசுக்கு ரூ. 17 லட்சம் வீண் செலவு ஏற்பட்டுள்ளதாகஜெயலலிதா கூறியுள்ளார்.
இதற்கு திமுக தலைவர் கருணாநிதி காட்டமான பதில் தந்துள்ளார்.
முரசொலியில் கருணாநிதி கூறியிருப்பதாவது:
மறு வாக்குப் பதிவுக்கு ரூ. 17 லட்சம் வீண் செலவானதாக முதல்வர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.அவசியமே இல்லாமல், சென்னை மேயர் பதவியிலிருந்து ஸ்டாலினை அகற்றி விட்டு அதற்கு தேர்தல் நடத்த விரும்பும் ஆட்சியாளர்கள்,அந்தத் தேர்தலுக்கு ரூ. 10 கோடி வரை செலவாகுமே என்பதை கவனத்தில் கொண்டார்களா?
மேயர் தேர்தல் நடத்தினால் 3600 வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டும். அதற்காகும் செலவுகளை எல்லாம் ஆட்சியாளர்கள் நினைத்துப்பார்த்தார்களா? இது மட்டும் செலவுக் கணக்கில் வராதா. இந்த செலவு தேவைதானா?
இடைத் தேர்தல் நடந்ததால் அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டதாக ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் முதல்வரும், அமைச்சர்களும்சைதாப்பேட்டை பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். பெரும்பாலான அமைச்சர்கள் சைதையில் இருந்தார்கள். இப்படி இருந்தால்அரசு நிர்வாகம் பாதிக்கப்படாமல் என்ன செய்யும்?
நாங்கள் கோரியபடி சைதை தொகுதியில் மறு வாக்குப் பதிவு நடந்திருந்தால், 20,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜெயித்திருப்போம்.அல்லது நாங்கள் குறிப்பிட்ட 57 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடந்திருந்தால் குறைந்தது 5000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்ஜெயித்திருப்போம்.
மறு வாக்குப் பதிவு நடந்த பகுதிகளில் திமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் 942 வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதாக ஜெயலலிதாகூறியுள்ளார்.இது பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய விஷயமா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.
கருணாநிதி மீது பன்னீர் பாய்ச்சல்:
இந் நிலையில் மத்திய தேர்தல் கமிஷன் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று கூறிவிட்டு மத்திய அரசுக்கூட்டணியில் திமுக தொடர்வது ஏன் என மாஜி முதல்வரும் அமைச்சருமான பன்னீர் கேட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முஷாரப் பாணியில் தேர்தல் நடந்ததாக கருணாநிதி முகாரி பாடியுள்ளார்.மக்கள் தீர்ப்பை எப்போதும் மதிப்பவரல்ல கருணாநிதி. இவர் வென்றால் தமிழினம் எழுந்தது என்றும் இவர்தோற்றால் தமிழினம் வீழ்ந்தது என்றும் வசனம் பேசியே காலத்தை ஓட்டிவிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தையே குறை கூறும் இவர் மத்திய அரசில் உள்ள தனது அமைச்சர்களை வெளியேறச்சொல்ல வேண்டியது தானே.
மக்கள் தீர்ப்பை மதிக்காத கருணாநிதி அரசியலில் இருக்கவே லாயக்கில்லை என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.