ஜெ. கொண்டு வந்த சட்டத்தை மதிக்க மாட்டேன்: ஸ்டாலின்
சென்னை:
தமிழக அரசின் ஒருவருக்கு ஒருவர் சட்டத்தை மதிக்கப் போவதில்லை. எந்தப் பதவியையும் ராஜினாமா செய்ய மாட்டேன். முடிந்தால் அரசுஎனது பதவியைப் பறித்துக் கொள்ளட்டும் என்று சென்னை மாநகராட்சி மேயர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியும் இதையே தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், மேயர் பதவிக்குரிய அதிகாரங்களைக் குறைத்து விட்டார்கள். இனிமேல் மேயராக யார்வந்தாலும் அவர் வெறும் பொம்மை மேயராகவே இருப்பார். அவரால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடையாது.
ஜெயலலிதா ஜனநாயகத்தை மதிப்பவராக இருந்தால், உண்மையான ஜனநாயகவாதியாக இருந்தால் இந்த சட்டத்தை கொண்டு வருவதற்குமுன் மாநகராட்சியின் ஒப்புதல் கேட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
தமிழகத்தில் இப்போது நடப்பது அதிமுக ஆட்சி அல்ல, துக்ளக் ஆட்சி. ஒருவருக்கு ஒரு பதவி என்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.ஆனால் தேர்தல் நடந்து முடிந்து நான் வென்ற பிறகு கொண்டு வந்ததைத்தான் எதிர்க்கிறோம். என்னை வெளியேற்றிய பிறகு துணைமேயருக்கோ அல்லது புதிய மேயருக்கோ அதிக அதிகாரங்களை வழங்க அதிமுக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
நான் எம்.எல்.ஏ. பதவி அல்லது மேயர் பதவியை எதையுமே ராஜினாமா செய்யப் போவதில்லை. இந்த சட்டத்தை மதித்தால்தானேராஜினாமா செய்ய வேண்டும். அவர்களாகவே எந்தப் பதவியை வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளட்டும்.
என்னைப் பதவியிலிருந்து நீக்கிய பிறகு துணை மேயர் கராத்தே தியாகராஜனை பொறுப்பு மேயராக வைத்திருக்க அவர்கள்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி 6 மாதத்திற்குள் மேயர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால்இந்த ஆட்சியில்தான் எது வேண்டுமானாலும் நடக்கலாமே. பொருத்திருந்து பார்ப்போம் என்றார் ஸ்டாலின்.