மீன் பிடிக்க வீசிய குண்டு வெடித்து மீனவர் பலி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே கடலில் மீன் பிடிப்பதற்காக வீசிய குண்டு மீனவர்கள் மீதே விழுந்து வெடித்ததில் ஒரு மீனவர்உடல் சிதறி உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியைச் சேர்ந்த நிஜாமுதீன், சையது இப்ராஹிம் மற்றும் சையது ஆகியமூன்று பேர் இன்று காலை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது வழக்கம். இவ்வாறு வெடிகுண்டுகளை வீசி மீன்பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிந்த போதும் அவர்கள் தொடர்ந்து இந்தத் தவறைச் செய்து வந்துள்ளனர்.
இன்றும் அது போலவே அந்த மீனவர்கள் ஒரு நாட்டு வெடிகுண்டைக் கடலுக்குள் வீசினர். அப்போது எதிர்பாராதவிதமாக எழுந்த ஒரு அலை அந்தக் குண்டை அவர்கள் மீதே வீசி விட்டது.
அந்தக் குண்டு பெரும் சத்தத்துடன் வெடித்ததில் சையது சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்ற இரண்டு மீனவர்களையும் அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பிற மீனவர்கள் விரைந்து கரைக்குக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்குத்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.