"காங்கிரஸ்-தமாகா இணைப்பு தேதி மீண்டும் தள்ளி வைப்பு?
சென்னை:
காங்கிரஸ்-தமாகா இணைப்பு மீண்டும் ஒத்தி வைக்கப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக இணைப்பு தொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்த பிறகு கடந்த மாதம் தான்காங்கிரசுடன் தமாகா இணைவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
அதைத் தொடர்ந்து முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி இணைப்புவிழாவை வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அதே தேதியில் தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்று அதன் பிறகு தான் இருகட்சியினருக்கும் தெரிய வந்தது. இதையடுத்து அவசர அவசரமாக இணைப்புத் தேதி மாற்றப்பட்டது.
அதன்படி ஆகஸ்டு 1ம் தேதி இணைப்பு விழா நடைபெறும் என்று இரு கட்சிகளின் சார்பிலும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஒரு சில நாட்களிலேயே அந்தத் தேதியும் மாற்றப்பட்டு கடைசியாக ஆகஸ்டு 12ம் தேதி காங்கிரசுடன்தமாகாவை இணைக்கும் விழா நடைபெறும் என்றும் இணைப்பு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும்என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த இணைப்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்வார் என்றும்கூறப்பட்டது. இதையடுத்து இணைப்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் மளமளவென்று தொடங்கி முழு வீச்சில் நடந்துவருகின்றன.
இந்நிலையில் ஆகஸ்டு 12ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று சமீபத்தில் தலைமைத் தேர்தல்கமிஷன் அறிவித்தது.
இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணியுடன் கடுமையான பலப் பரீட்சைக்குக் காங்கிரஸ் தயாராகிவருவதால், காங்கிரஸ் எம்.பிக்கள் மட்டுமில்லாமல் தமாகா எம்.பிக்களும் டெல்லியில் கட்டாயம் இருந்தே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே கடைசியாகக் குறிக்கப்பட்டுள்ள இந்தத் தேதியிலும் காங்கிரஸ்-தமாகா இணைப்பு நடப்பதற்கானவாய்ப்புக்களே இல்லை. எனவே இணைப்புத் தேதி மீண்டும் தள்ளிப் போகிறது.
இணைப்புத் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும்கூறியுள்ளார். ஆகஸ்டு 11 அல்லது ஆகஸ்டு 13 ஆகியவற்றில் ஏதாவது ஒரு நாள் இணைப்பு விழா நடக்கலாம்என்றும் அவர் தெரிவித்தார்.
இணைப்பு தேதி குறித்து காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமாகா சட்டசபைத் தலைவரானஎஸ்.ஆர். பாலசுப்பிரமணியமும் கூறிவிட்டார்.
ஆனாலும் இன்னும் இணைப்புக்கான புதிய தேதி இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்படவில்லை.
காங்கிரசுடன் தமாகா இணைவது என்று முடிவெடுத்த பிறகு மூன்று முறை இணைப்புத் தேதிஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காங்கிரசில் இணைந்த பிறகு தமாகாவில் உள்ள முக்கியத் தலைவர்களுக்குப் பதவிகள்ஒதுக்கப்படுவது தொடர்பாக நீடித்து வரும் இழுபறிகளே இந்த இணைப்புத் தேதி அடிக்கடி தள்ளிப் போவதற்குக்காரணம் என்றும் கூறப்படுகிறது.