சிங்கப்பூர் அருகே இந்திய- பனாமா கப்பல்கள் மோதல்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் அருகே இந்திய எண்ணெய்க் கப்பலும் பனாமா நாட்டு சரக்குக் கப்பலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில்எண்ணெய் கப்பலில் இருந்து 19 டன் குரூட் எண்ணெய் சிங்கப்பூர் கடல் பகுதியில் கொட்டியது.
இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. இந்திய கப்பலான லேன்ஸ் நாயக் கரம் சிங்கின் வலது புற எண்ணெய் டாங்க்உடைந்து போனது. அதே போல பனாமா கப்பலான சீ எபோக்கிலும் பிளவு ஏற்பட்டது.
சிங்கப்பூரின் டனா மெரா பெர்ரி டெர்மினல் பகுதியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் கடலில் இந்த விபத்து ஏற்பட்டது.
கடலில் கொட்டிய எண்ணெய் லைட் குரூட் வகையைச் சேர்ந்தது. இதனால் கடல் பகுதி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.சம்பவம் குறித்து அறிந்தவுடன் சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் படையின் 6 படகுகள் அங்கு விரைந்து எண்ணெய்படலத்தை உடனடியாக அகற்றின.
இந்த கப்பல்கள் மோதல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.