ராமதாஸ் வழக்கு போட்டால் சந்திப்பேன்: சபாநாயகர் காளிமுத்து
சென்னை:
சிவகாமி வின்சென்ட், முருகவேல் ராஜன் ஆகிய இரு எம்.எல்.ஏக்களும் இன்னும் பாட்டாளி மக்கள் கட்சியில் தான் உள்ளனர் எனசபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
இந்த இரு எம்.எல்.ஏக்களும் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும் இதனால் அவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என சபாநாயகர் காளிமுத்துவுக்கு அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரியிருந்தார். அவர்களை பதவி நீக்கம்செய்யாவிட்டால் 1 வாரத்தில் சபாநாயருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
பா.ம.கவை உடைக்க சதி...
இந்த இரு எம்.எல்.ஏக்களும் தங்களுக்கு பா.ம.கவில் மரியாதை இல்லை என்றும் இதனால் தனித்து செயல்படுவதாகவும்கூறியிருந்தனர். ஆனால், இவர்களை இழுத்து பா.ம.கவை உடைக்க அதிமுக முயல்வதாக ராமதாஸ் கூறியுள்ளார். மேலும்பா.ம.கவில் இருந்து மூன்றில் ஒருபங்கு எம்.எல்.ஏக்களை அதிமுகவுக்கு இழுக்கும் வேலையில் செங்கோட்டையன், தலித்எழில்மலை போன்றவர்கள் ஈடுபட்டுள்ளதாக பா.ம.க. கூறியுள்ளது.
அதிமுகவின் வலையில் இரு எம்.எல்.ஏக்கள் விழுந்துவிட்டதாகக் கூறியுள்ள ராமதாஸ் முதலில் இந்த இருவரையும் பதவி நீக்கவேண்டும என ராமதாஸ் கூறியுள்ளார்.
விளக்கம் கேட்டுள்ளேன்: காளிமுத்து
இந் நிலையில் சபாநாயகர் இன்று காளிமுத்து நிருபர்களிடம் கூறுகையில்,
இந்த இரு எம்.எல்.ஏக்களும் தங்கள் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி எனக்கு நீண்டகடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து இந்த இரு எம்.எல்.ஏக்களும் நான விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறேன். ஒருவாரத்தில் அவர்கள் விளக்கம் தர வேண்டும். ஆனால், இன்னும் பதில் வரவில்லை.
முன்பு இந்த இரு எம்.எல்.ஏக்களும் எனக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில் தாங்கள் பாட்டாளி மக்கள் கட்சியிடம் இருந்துவிலகுவதாக இவர்கள் கூறவில்லை. தங்களுக்கு கட்சியில் பிரச்சனை உள்ளதாகவும் அதனால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்என்றும் கோரினர். இதனால் அவர்களுக்கு பாதுகாப்புத் தரப்பட்டது.
ஒரு கட்சியின் உறுப்பினர் பதவியைப் பறிக்க வேண்டுமானால் அவர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும்.அல்லது கட்சியில் இருந்து அவர்கள் நீக்கப்பட வேண்டும். அவர்களை நீக்கிவிட்டதாக மணி கூறியுள்ளார். ஆனால்,விலகவில்லை என இருவரும் கூறுகின்றனர்.
எனக்கு எதிராக ராமதாஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் அதை சந்திப்பேன் என்றார் காளிமுத்து.
பைத்தியம் பிடிக்க வைத்தார்கள்: சிவகாமி
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய சிவகாமி வின்சென்ட், நான் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகவில்லை. அக்கட்சியில் தலித்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். என்னை கிட்டத்தட்ட பைத்தியக்காரி நிலைமைக்கு தள்ளிவிட்டார்கள்.இதனால் தான் அக் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். விலகவில்லை. என்னை ராமதாஸ் நீக்கினாலும் நான் பா.ம.கவில்தான் இருப்பேன் என்றார்.
ஜெவை வரவேற்க...
நேற்று ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வந்த முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க நின்றிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்வரிசையில் சிவகாமி வின்சென்டும் நின்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.