ஒகேனக்கல்லில் கொட்டும் அருவி: மக்கள் மகிழ்ச்சி
ஒகேனக்கல்:
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து ஒகேனக்கல் அருவியில் ஏராளமானநீர் கொட்டுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே கொளுத்திய கோடை வெயில் காரணமாக ஒகேனக்கல் அருவி வறண்டு போய்காணப்பட்டது.
இதனால் வழக்கமாக கோடை விடுமுறைக்கு அங்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துகாணப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கேரள-கர்நாடக எல்லைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இதையடுத்து கர்நாடகத்தின் கபினி அணை நிறைந்து விட்டது.
இதனால் அங்கு வந்து சேரும் உபரி நீர் முழுவதையும் தமிழகம் நோக்கி கர்நாடக அரசு திறந்து விட்டது.
இதைத் தொடர்ந்து கபினி அணையில் திறந்து விடப்பட்ட நீர் ஒகேனக்கல் அருவியில் வெள்ளமாக வந்து கொட்டிக்கொண்டிருக்கிறது. இதைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் மிகவும் மகிழ்ந்து போயுள்ளனர்.
மேலும் ஒகேனக்கல் அருவியில் நீர் கொட்டிக் கொண்டிருப்பதால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்தக் கொண்டே வருகிறது.
மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரிப்பு:
இதற்கிடையே கபினி அணையில் திறந்து விடப்பட்ட நீர் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியுள்ளது.
இன்று காலைக்குள் மேட்டூர் அணையின் நீர் கொள்ளளவு இரண்டு அடி வரை அதிகரித்து 35.04 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 11,247 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு சுமார் 10,000 கன அடி நீர்பாசனத்திற்காகத் திறந்து விடப்படுகிறது.