வன்னியர் சங்க கூட்டத்தில் பாமக தொண்டர் குத்திக் கொலை
உத்திரமேரூர்:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்ட வன்னியர் சங்கப் பொதுக் கூட்ட மேடையருகே அக்கட்சித்தொண்டர் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வன்னியர் சங்கம் சார்பில் "வன்னியர் வாழ்வுரிமை மாநாடு" நேற்றுநடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டாக்டர் ராமதாசும் கலந்து கொண்டார்.
நேற்று இரவு இந்த மாநாடு நடந்து கொண்டிருந்த போது மாநாட்டுக் கூட்டத்தின் மேடையருகே ஏராளமானபாமகவினர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று அங்கு வந்த ஒரு கும்பல் பாமக தொண்டரான அச்சையன் என்பவரை சுற்றி வளைத்துக்கொண்டு பயங்கரமாகத் தாக்கினர்.
இந்தத் திடீர்த் தாக்குதலால் தடுமாறிக் கீழே விழுந்த அச்சையன் பின்னர் எழுந்து ஓட முயற்சித்தார். ஆனால்அவரைத் தப்பிக்க முடியாத படி சூழ்ந்து கொண்ட அந்தக் கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களால்தாக்க ஆரம்பித்தது.
பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் திடீரென்று தான் வைத்திருந்த கத்தியால் அச்சையனின் வயிற்றில்சராமாரியாகக் குத்தினான்.
இதனால் நிலைகுலைந்து போன அச்சையன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.இதையடுத்து அந்தக் கொலைக் கும்பல் தப்பித்து ஓடிவிட்டது.
இந்தத் திடீர்க் கொலைச் சம்பவத்தால் வன்னியர் சங்க மாநாட்டுக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொலை செய்த கும்பலைச் சேர்ந்தவர்களைத்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.