தலைமை செயலகத்தில் மற்றொரு தற்கொலை முயற்சி
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியாததால் நேற்று ஒருவர் தூக்கமாத்திரைகளைச் சாப்பிட்டு அங்கேயே மயங்கி விழுந்தார்.
சென்னை-ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ரவி (40) என்பவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
ரவியின் பூர்வீகச் சொத்துக்களை அவருடைய சித்தப்பா ஏமாற்றிப் பறித்துக் கொண்டதையடுத்து, அவர் தற்போதுவாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். மேலும் ரவி வேலை எதுவும் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.
தன்னுடைய பிரச்சனைகள் குறித்து முதல்வரின் தனிப் பிரிவில் சில மாதங்களுக்கு முன் ரவி புகார் கொடுத்திருந்தார்.ஆனால் அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு ரவி தலைமைச் செயலகத்திற்கு வந்தார். ஜெயலலிதாவைச் சந்தித்து மனுகொடுப்பதற்காக மற்றவர்களுடன் அவரும் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது ரவி திடீரென்று மயங்கி விழவே, கோட்டையில் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்மருத்துவக் குழு விரைந்து சென்று அவரைப் பரிசோதித்துப் பார்த்த போது அவர் ஏராளமான தூக்க மாத்திரைகளைசாப்பிட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ரவி உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவைச் சந்தித்து மனு கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கத்திலேயே இதுவரை பத்துக்கும் மேற்பட்டபொதுமக்கள் தலைமைச் செயலகத்தில் வைத்தே தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களில் நான்கு பேர் வரைஉயிரிழந்துள்ளனர்.